பாடல் – 85
எள்ளப் படுமரபிற் றாகலும் உள்பொருளைக்
கேட்டு மறவாத கூர்மையும் முட்டின்றி
உள்பொருள் சொல்லும் உணர்ச்சியும் இம்மூன்றும்
ஒள்ளிய ஒற்றாள் குணம்.
(இ-ள்.) எள்ளப்படும் – (தன் செய்கை பகைவரால்) நன்கு மதிக்கப்படாத, மரபிற்று ஆகலும் – முறையை உடையதாதலும்; உள் பொருளை – (அப் பகைவரிடத்து) நடந்துள்ள காரியத்தை, கேட்டு மறவாத – கேட்டுப் பின் மறவாத, கூர்மையும் – கூரறிவுடைமையும்; உள் பொருள் – அப் பொருளை, முட்டு இன்றி – தடையின்றி, சொல்லும் உணர்ச்சியும் – (தன் அரசனுக்குச்) சொல்லுகின்ற தெளிவுடைமையும்; இ மூன்றும் – ஆகிய இம் மூன்றும், ஒள்ளிய – அறிவுள்ள, ஒற்று ஆள் – வேவுகாரனது; குணம் – தன்மையாம்; (எ-று.)
(க-ரை.) பகைவன் நாட்டில் தான் இருந்து செய்யும் செய்கை பிறர் கருதத் தக்கது ஆகாதபடி செய்தலும், அவன் கருத்தறிந்து மறவாதிருத்தலும் அக் கருத்தை அரசர்க்குச் செவ்வையாகத் தெரிவிக்கும் வலிமை பெற்றிருத்தலும், வேவுகாரர்க்குரிய குணங்களாம் என்பது.
மரபிற்று : குறிப்பு வினைமுற்று; குறிப்பு வினையாலணையும் பெயருமாம். உள் பொருள் – உண்மையாகிய பொருள் : பண்புத்தொகை – முட்டு – முட்டுதல் : முதனிலைத் தொழிற்பெயர்.