பாடல் – 84
வாய்நன் கமையாக் குளனும் வயிறாரத்
தாய்முலை யுண்ணாக் குழவியும் சேயமரபில்
கல்விமாண் பில்லாத மாந்தரும் இம்மூவர்
நல்குரவு சேரப்பட் டார்.
(இ-ள்.) வாய் – நீர் வரும்வழி, நன்கு அமையாக் குளனும் – நன்றாக அமைந்திராத குளமும்; வயிறு ஆர – தன் வயிறு நிரம்பும்படி, தாய்முலை உண்ணா – தாயின் முலைப்பாலை உண்ணாத, குழவியும் – குழந்தையும்; சேய் மரபில் – உயர்ந்த முறைமையில், கல்வி மாண்பு – நூல்களைக் கற்றலினது மாட்சிமைப்பட்ட அறிவு, இல்லாத மாந்தரும் – இல்லாத மனிதரும்; இ மூவர் – ஆகிய இம்மூவரும், நல்குரவு சேரப்பட்டார் – வறுமையால் பீடிக்கப்பட்டவராவர்; (எ-று.)
(க-ரை.) குளத்துக்கு நீர் இன்மையும், குழவிக்குப் பாலின்மையும்; மாந்தருக்கு அறிவின்மையும் நல்குரவு எனப்பட்டன என்பது.
வாய் – வழி, குளன் : குளம் என்பதன் போலி. சேய மரபில் – உயர்ந்த குலத்தில் எனவும், உயர்ந்த முறையில் எனவும் பொருள் கொள்ளலாம். இம் மூவரும் நல்குரவு அடைந்து வருந்துதல் உறுதியாதலால், துணிவுபற்றி நல்குரவு சேரப்பட்டார் என இறந்த காலத்தாற் கூறினார். சேய் மரபில் என்றதாவது நல்லாசிரியரிடத்து அவர் குறிப்பின்வழி ஒழுகி முன்னர் நிகண்டு கற்று ஆராய்ச்சி செய்து இலக்கணநூல் முதலியவற்றைக் கற்பது என்பதாம்.