பாடல் – 41
அலந்தார்க்கொன் றீந்த புகழும் துளங்கினுந்
தன்குடிமை குன்றாத் தகைமையும் – அன்போடி
நாள்நாளு நட்டார்ப் பெருக்கலும் இம்மூன்றுங்
கேள்வியு ளெல்லாந் தலை.
(இ-ள்.) அலந்தார்க்கு – (வறுமையால்) துன்பப்பட்டு வந்தவர்கட்கு, ஒன்று – (அவர் விரும்பும்) ஒரு பொருளை, ஈந்த புகழும் – ஈந்ததனாலாகிய இசையும்; துளங்கினும் – (வறுமை முதலிய வற்றால்) தளர்ந்த காலத்தும். தன் குடிமை – தன் குடிப்பிறப்புக்குத் தகுந்த ஒழுக்கம், குன்றாத் தன்மையும் – குறையாத இயல்பும்; அன்புஓடி – அன்பு மிகுந்து, நாள் நாளும் – நாடோறும், நட்டார் – நட்புச்செய்தவரை, பெருக்கலும் – பெருகச் செய்தலும்; இ மூன்றும் – ஆகிய இம்மூன்றும், கேள்வியுள் எல்லாம் – கேட்கப்படும் அறங்கள் பலவற்றிலும், தலை – முதன்மையானவையாம்; (எ-று.)
(க-ரை.) வறுமையால் வருந்துவோர்க்கு ஈதலும், வறுமை யுற்ற விடத்தும் தன் குடிப்பிறப்புக்குத் தாழ்வனவற்றைச் செய்யாமையும். நட்புச்செய்தவரை மேன்மேலும் பெருக்குவதும் சிறந்த அறம்.
அலந்தார்க்கு : அல என்ற பகுதியடியாகப் பிறந்த வினையாலணையும் பெயர். ஈந்த புகழ் – ஈந்ததனாலாய புகழ் : காரணப் பொருளில் வந்த பெயரெச்சம். இன்னாத்தகைமை – இன்னாமைக்கு ஏதுவாகிய தகைமை : காரணப் பொருள்தரும் பெயரெச்சம். கேள்வி – கேட்டலா லுண்டாகிய அறிவு : காரணவாகு பெயர்.