பாடல் – 14
இழுக்கல் இயல்பிற் றிளமை பழித்தவை
சொல்லுதல் வற்றாகும் பேதைமை – யாண்டும்
செறுவொடு நிற்குஞ் சிறுமைஇம் மூன்றும்
குறுகார் அறிவுடை யார்.
(இ-ள்.) இளமை – இளமைப் பருவம், இழுக்கல் – வழுவுதலை, இயல்பிற்று – இயல்பாகவுடையது; பேதைமை – அறியாமை, பழித்தவை – (அறிவுடையோரால்) விலக்கப்பட்டவைகளை; சொல்லுதல் – சொல்லுதலில், வற்று ஆகும் – வல்லதாம், சிறுமை – ஈனத்தன்மை, யாண்டும் – எக்காலத்தும் செறுவொடு – சினத்தோடு, நிற்கும் – நிற்பதாகும் (ஆதலால்), இ மூன்றும் – இம் மூவகையினையும், அறிவு உடையார் – (மேல் விளைவை) அறிதலையுடையார், குறுகார் – நெருங்கார்; (எ-று.)
(க-ரை.) இயல்பாக வழுவுதலையுடையது இளமைப்பருவமாம்; வெறுப்பவைகளைச் சொல்லுதல் மூடத்தனம்; எப்போதும் சினத்தோடிருப்பது சிறுமை; இவை ஒருவனுக்கு இருந்தால் பெரியோர்அவனைச் சேரார்.
இழுக்கல் – வழக்குதல்; இழுக்கு : பகுதி, அல் : தொழிற் பெயர் விகுதி, இயல்பிற்று : குறிப்பு முற்று. இயல்பு ; பகுதி, இன் : சாரியை. று : விகுதி. னகரம் றகரமாகத் திரிந்தது. பழித்தவை : பலவின்பால் வினையாலணையும் பெயர். வற்று : வன்மையின் திரிபாகிய வல் : பகுதி. று : ஒன்றன்பால் விகுதி, லகரம் றகரமானது சந்தி. செறுவொடு : ஒடு என்னும் மூன்றனுருபு விசேடணப் பொருளது. சிறுமையுடன் செறுவும் உடனிகழ்தலால், உடனிகழ்ச்சிப்பொருளுமாம், இளமை, பேதைமை, சிறுமைகள் அவற்றையுடையார்க்குப் பண்பாகு பெயரென்றாயினும், இழிவுபற்றி உயர்திணையை அஃறிணையாகக் கூறியதென்றாயினும் அமைத்துக்கொள்க.