தொடர் – 37

லிமரைக்கூ..

ஜப்பானிய கவிதை வடிவமான ஹைக்கூ 5 – 7 – 5 என்ற அசையின் படி எழுதப்படுவது..

ஆங்கில கவிஞர்களால் எழுதப்படும் லிமரிக் எனும் குறும்பா 5 அடிகளில் எழுதப்படும் ஒரு கவிதை வடிவம்.

இவ்விரண்டையும் இணைத்து ஏன் ஒரு கவிதை வடிவம் கொடுக்க கூடாது என விரும்பிய ஆங்கிலேய கவிஞர் டெட் பாக்கர் (Ted Pauker) முதன் முதலில் இந்த லிமரைக்கூ எனும் கலப்பின குறும்பாவினை வடிவமைத்தார்.

இதனை… தமிழில் முதலில் எழுதி அறிமுகப் படுத்தியவர் கவிஞர்.ஈரோடு தமிழன்பன் அவர்கள்.

தனது சென்னிமலை கிளியோபாத்ராக்கள் எனும் நூலில் 138 பாக்களைத் தொகுத்து லிமரைக்கூ எனும் புது வடிவை தமிழுக்கு அறிமுகம் செய்தார். இது ஹைக்கூவின் இயல்புகளோடு… வேடிக்கை..வினோதம்..நகைச்சுவை சார்ந்தும் எழுதப்பட்டது.

தமிழ் லிமரைக்கூ பொதுவில் ஹைக்கூ மற்றும் சென்ரியு கலந்த ஒரு வடிவமாக… 3 – 4 – 3 என்ற வாரத்தை அமைப்பிலோ, அல்லது 2 – 3 – 2 என்ற வார்த்தை அமைப்பிலோ மூன்றடிகளில் எழுதப்பட்டது. முக்கியமாய் முதல் அடி மற்றும் இறுதி அடியை விட நடுஅடி நீளமாய் இருத்தல் வேண்டும்.

துவக்கத்தில் சந்த நயத்துடன், மோனை அமைத்தும், (பின் அதை தவிர்த்து விட்டனர்) ஈற்றசையில் முதல் மற்றும் ஈற்றடியில் இயைபு (ரைம்) வருமாறும் எழுதப் படும் வடிவமாகும்.

லிமரைக்கூவும் சிறப்பான வரவேற்பினைப் பெற்று, தமிழ் இலக்கிய உலகில் ஹைக்கூ வகைமை கவிதைகளோடு இரண்டறக் கலந்து விட்டது. இன்று பலரும் லிமரைக்கூ படைக்கவும், அதில் நூல்கள் வெளியிடவும் செய்கிறார்கள்.

நாமிங்கு சில லிமரைக்கூ கவிதைகளைக் காண்போம்..

குருக்கள் தெய்வங்கள் ஆனார்கள்
கோயில் இல்லா ஊர்களிலே தெய்வங்கள்
குடி இருக்கப் போனார்கள்..!

ஊது வத்திச் சின்னம்
கட்சி வென்று கோட்டை பிடித்தும்
நாற்றம் போகலை இன்னும்.

  • ஈரோடு தமிழன்பன்

வீசும் மெல்லியக் காற்று
வயலில் ஆனந்த நடனம்
ஆடிக் களிக்கும் நாற்று.

  • ந.க.துறைவன் (உப்பு பொம்மைகள்)

தமிழில் பேசிடத் தயக்கம்
தரமிகு தமிழ்மொழி தவிக்கும் சிலருக்கு
ஆங்கிலம் மீது மயக்கம்.

  • மகிழ்நன் மறைக்காடு

மழலை மொழியே கரும்பு
மதியோடு நீயும் தாய்மொழிக் கல்வியை
மனதில் பதிக்க விரும்பு.

  • கு.அ.தமிழ்மொழி

எண்வழிச் சாலை
விருப்பமின்றி விளைநிலம் பறித்து
நாட்டும்வழிப் பாலை.

  • சோமு சக்தி

அதிவிரைவுப் பயணம் ஆபத்து
அறிந்தும் பலர் தொடர்வதால் நிகழ்கிறது
அடிக்கடி எங்கும் விபத்து.

  • கார்த்திக் செல்வா

பஞ்ச காலத்தில் கொக்கும்
நீரின்றி வற்றிய குளங்களைத் துறந்து
பறந்திடும் எட்டு திக்கும்.

  • முனைவர் வே.புகழேந்தி

குளத்தில் படர்ந்துள்ளது பாசி
தூய்மையின் சிறப்புணரா மனிதனுக்கு இறைவன்
நாளும் வழங்கும் ஆசி..!

  • அனுராஜ்

உண்டால் கொல்லும் அரளி
ஊரெங்கும் சடுதியில் விரைந்து பரவி
உண்ணாமலேக் கொல்லும் புரளி.!

  • விஜயகுமார் வேல்முருகன்

மேற்கண்ட லிமரைக்கூ பெரும்பாலும் 3 – 4 – 3 என்ற வடிவிலும், 2 – 3 – 2 என்ற வடிவிலும், திரு.ந.க.துறைவன் அவர்களின் லிமரைக்கூ 3 – 3 – 3 என்ற வடிவிலும் அமைந்திருப்பதைக் காணலாம். இவற்றில் 3 – 4 – 3 என்ற வடிவமைப்பில் அமைப்பதே சிறப்பானதாகும்.

இன்னும் வரும்..

முன் தொடர்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.