தொடர் 30
இதுநாள் வரையில் ஒரு ஹைக்கூவை சிறப்பாக எழுதுவதற்கான சில வழிமுறைகளைக் கண்டோம்..
இப்போது ஒரு காட்சி…
நீங்கள் வெளியூரில் வேலைசெய்கிறீர்கள். விடுமுறையை ஒட்டி தொலைதூரத்தில் உள்ள உங்களது சொந்த ஊருக்கு செல்லப் பேருந்து நிலையம் வருகிறீர்கள். இரவு நேரம். வரக்கூடியப் பேருந்து அனைத்தும் கூட்டமாக பயணிகளைத் திணித்தபடியே வருகிறது..
சில மணி நேரத்திற்குப்பின், ஒரு வழியாக உங்களுக்கு அமர்ந்து செல்ல வண்டியில் இடம் கிடைத்து விட்டது.
இந்நிகழ்ச்சியை நீங்கள் ஹைக்கூவாக்க விரும்புகிறீர்கள். இதோ… இப்படி..
இரவு நேரப் பயணம்
பேருந்து முழுதும் நிரம்பி வழிகிறது.
இவ்விடத்தில் நீங்கள் நிறுத்தும் போது, வாசகனின் எண்ண ஓட்டமானது… பயணிகளால் என ஈற்றடி அமையலாம் என்ற சிந்தனையை விதைக்கும். ஆனால் நீங்களோ ஹைக்கூவிற்கே உரித்தான ஈற்றடி திருப்பமாய்…
இரவு நேரப்பயணம்
பேருந்து முழுதும் நிரம்பி வழிகிறது
இளையராஜாவின் இசை..!
இங்கு ஈற்றடியாக… பழைய பாடல்கள்.. மெல்லிசை மன்னரின் பாடல்கள்… கண்ணதாசன் பாடல்கள்… என உங்களுக்கு பிடித்தமானதை பதிவிடலாம். இல்லை உங்களது சிந்தனையை வேறு வகையிலும் கொண்டு செல்லலாம். ஆனால் ஈற்றடி பெயர்சொல்லில் அமைவது சிறப்பு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஹைக்கூ புரிதலுக்கானது. நமது சிந்தனையை விரிவாக்கவே நல்லதொரு கவிதையை நாம் படைக்க இயலும். படைப்பாளனின் பணி எழுதுவதோடு நின்றுவிடும்… வாசகனே அதை பல கோணங்களில் எடுத்துச் செல்வான்.
அடுத்து ஹைக்கூ வகைமையான “சென்ரியு” பற்றி காண்போம்.