பாடல் – 79
பழியஞ்சான் வாழும் பசுவும் அழிவினால்
கொண்ட அருந்தவம் விட்டானும் – கொண்டிருந்
தில்லஞ்சி வாழும் எருதும் இவர்மூவர்
நெல்லுண்டல் நெஞ்சிற்கோர் நோய்.
(இ-ள்.) பழி அஞ்சான் – (உலகம் பழிக்கும்) பழிப்புக்குப் பயப்படாமல், வாழும் – உயிர் வாழ்கின்ற, பசுவும் – பசுப்போல்வானும்; அழிவினால் – கேடு வந்த போது, கொண்ட – (தனக்கு உரித்தாகக்) கொண்ட, அருந்தவம் – அரிய தவத்தினை, விட்டானும் – விட்டவனும்; கொண்டிருந்தும் – (தனக்கு உட்பட்டவளாகக்) கொண்டிருந்தும், இல் – மனைவிக்கு, அஞ்சி – பயந்து, வாழும் – நடக்கின்ற, எருதும் – எருதுபோல்வானும்; இவர் மூவர் – ஆகிய இம் மூவரும், நெல் உண்டல் – (மக்கள் உண்ணக் கடவதாகிய) சோற்றை யுண்ணுதல், நெஞ்சிற்கு – (அறிவுடையார்) நெஞ்சுக்கு, ஓர் நோய் – ஒருநோயாம்; (எ-று.)
(க-ரை.) பழிக்கு கஞ்சாதவனும், கேடுற்றதென்று தவத்தை விட்டவனும், மனையாளுக்குப் பயந்து நடக்கும் கணவனும் உண்ணாது ஒழியத் தக்கவர் என்பது.
அஞ்சான் : முற்றெச்சம். பசு, எருது : உவமை யாகுபெயர்கள். நெல் அரிசிக்காகி; அது சோற்றுக்கு ஆயினமையின் இரு மடியாகுபெயர். ‘நெல்லுண்ட நெஞ்சிற்கோர் நோய்’ எனப் பாடங் கொள்ளின் நெல்லைத்தின்னநெஞ்சுக் குண்டாகும் துன்பத்தோடு ஒத்தவர் எனப் பொருள் கொள்க.