பாடல் – 78
தூய்மை யுடைமை துணிவாம் தொழிலகற்றும்
வாய்மை யுடைமை வனப்பாகும் – தீமை
மனத்தினும் வாயினுஞ் சொல்லாமை மூன்றும்
தவத்தில் தருக்கினார் கோள்.
(இ-ள்.) தூய்மை உடைமை – மனத் தூய்மை யுடையராயிருத்தலும்; துணிவு ஆம் – (மெய்நூல்களாலே) துணியப் பட்ட, தொழில் – நற்செய்கையை, அகற்றும் – விரிக்கின்ற, வாய்மையுடைமை – உண்மையுடையவனாயிருத்தலும்,வனப்பு ஆகும் – மங்கையருடைய அழகாகிய, தீமை – தீமையைத் தருவதனை, மனத்தினும் – மனத்தால் நினையாமையும்; வாயினும் – வாயால், சொல்லாமை – சொல்லாமையும்; மூன்றும் – ஆகிய இம் மூன்றும் , தவத்தில் – தவத்திலே, தருக்கினார் – செருக்கி நின்றவர்களுடைய, கோள் – கொள்கையாம்; (எ-று.)
(க-ரை.)தூய்மையும், வாய்மையாயிருப்பதுவும், தீமையை நினையாமலும் சொல்லாமலு மிருப்பதும் நற்றவமுடையார் செயல் என்பது.
துணிவு – துணியப்பட்டது : தொழிலாகுபெயர். அகற்றும் – அகல் என்னும் முதனிலை யடியாகப் பிறந்த பிறவினைப் பெயரெச்சம். தவத்தினரை நோக்கினமையின் வனப்பு பெண்ணின் வனப்புக்காயிற்று. மனத்தினாற் சொல்லாமையாவது இலக்கணையால் நினையாமையாம். தீமை – தீமையைத் தருவது – காரணம் காரியமாகச் சொல்லப்பட்டது.