பாடல் – 77
கயவரைக் கையிகந்து வாழ்தல் நயவரை
நள்ளிருளுங் கைவிடா நட்டொழுகல் – தெள்ளி
வடுவான வாராமல் காத்தலிம் மூன்றும்
குடிமா சிலர்க்கே யுள.
(இ-ள்.) கயவரை – கீழ்மக்களை, கையிகந்து – கைவிட்டு (சேராமல்,) வாழ்தல் – வாழ்தலும்; நயவரை – நீதியுடையவரை, நட்டு – நட்புச் செய்து, நள் இருளும் – நடு இரவிலும், கைவிடா – கைவிடாமல், ஒழுகல் – (அவருக்கு இணங்க) நடத்தலும்; தெள்ளி – ஆராய்ந்து, வடுவான- தனக்குப் பழிப்பான காரியங்கள், வாராமல் – வரவொட்டாமல், காத்தல் – காத்துக் கொள்ளுதலும்; இ மூன்றும் – ஆகிய இம் மூன்றும், குடி – குடிப்பிறப்பிலே, மாசு இலார்க்கே – குற்றம் இல்லாதவர்க்கே, உள – உண்டாகும்; (எ-று)
(க-ரை.) கீழ்மக்கள் கூட்டுறவை விட்டிருப்பதும், மேன் மக்களை எப்பொழுதும் பிரியாதிருப்பதும், தமக்குப் பழி வராமற் காப்பதும் நல்லோர்க்கு உரியன என்பது.
கயவர் : கய என்னும் பண்படியாகப் பிறந்த பெயர். நயம் : நீதி. நள் – நடுக்கம்; இப் பொருளில் நள்ளிரா அச்சத்தைத்தரும் நடு இரா எனக் கொள்க. இருள் : பண்பாகுபெயர். உம் : உயர்வு சிறப்பு. வடுவான : பலவின்பாற் பெயர்.