பாடல் – 69
அருந்தொழில் ஆற்றும் பகடும் திருந்திய
மெய்ந்நிறைந்து நீடிருந்த கன்னியும் – நொந்து
நெறிமாறி வந்த விருந்துமிம் மூன்றும்
பெறுமா றரிய பொருள்.
(இ-ள்.) அரும்தொழில் – (உழுதல் பெருஞ்சுமை தாங்குதல் முதலிய) அரிய தொழிலை, ஆற்றும் பகடும் – செய்யவல்ல கடாவும், திருந்திய – குற்றமற்ற, மெய்நிறைந்து – உடலிலக்கணம் நிரம்பி, நீடு இருந்த – நெடுநாள் (மணமின்றி) இருந்த, கன்னியும் – இளம் பெண்ணும்; நெறிமாறி – வழிதப்பி, நொந்து வந்த பசித்துவந்த, விருந்தும் – விருந்தினரும்; இ மூன்றும் – ஆகிய இம்மூன்றும், பெறும் ஆறு – பெறுகின்ற வழியில், அரிய பொருள் – அரிய பொருள்களாம்; (எ-று.)
(க-ரை.) நிலத்தையுழவல்ல பாரம் சுமக்கும் எருதும், உடலுறுப்பிலக்கணம் அமைந்த கன்னியும், வழிதப்பிப் பசித்து வருந்தும் விருந்தும் கிடைத்தற்கரிய பொருள் என்பது.
மெய் – மெய்யின் இயல் : பொருளாகுபெயராய்த் தன் இலக்கணத்தை யுணர்த்திற்று. வந்த : இடவழுவமைதி. உயர் திணையாகிய கன்னி மிகுதி பற்றி மூன்றும் என்னும் அஃறிணை முடிபேற்றது.