பாடல் – 68
இல்லார்க்கொன் றீயும் உடைமையும் இவ்வுலகில்
நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் – எவ்வுயிர்க்கும்
துன்புறுவ செய்யாத தூய்மையும் இம்மூன்றும்
நன்றறியும் மாந்தர்க் குள.
(இ-ள்.) இல்லார்க்கு – வறியவர்க்கு, ஒன்று ஒருபொருளை ஈயும் – கொடுக்கும், உடைமையும் – செல்வமும்; இவ்வுலகில் – இவ்வுலகத்தின் பொருள்களின், நில்லாமை – நிலையாமையை, உள்ளும் ஆராய்ந்து அறியும், நெறிப்பாடும் – வழியில் பொருந்துதலும்; எவ்வுயிர்க்கும் – எல்லா வுயிர்க்கும், துன்பு உறுவ – துன்பம் அடைவதற்கு ஏதுவாகிய செய்கைகளை, செய்யாத தூய்மையும் – செய்யாத தூய தன்மையும்; இ மூன்றும் – ஆகிய இம் மூன்றும், நன்று – அறத்தை, அறியும் – அறியக்கூடிய மாந்தர்க் மக்கட்கு, உள – உண்டு; (எ-று.)
(க-ரை.) வறியோரைக் காக்கும் செல்வமும், பொருள்களின் நிலையாமையை யறிந்து நடக்குந் தன்மையும் எவ்வுயிர்க்கும் இன்பம் அளிக்கும் செம்மையும் அறமுணர்ந்தவர்களிடத்திலேயே உண்டு என்பது.
ஒன்று – எண்ணல் அளவையாகு பெயர். உடைமை : பண்பாகு பெயர். உலகு : இடவாகு பெயர். நில்லாமை . நிலையாமை, நில்லாதவற்றை நிலையின வென்றுணர்வது புல்லறிவாண்மை எனப்படும். உருவ : பலவின்பால் வினையாலணையும் பெயர்.