பாடல் – 67
எதிர்நிற்கும் பெண்ணும் இயல்பியல் தொழும்பும்
செயிர்நிற்குஞ் சுற்றமும் ஆகி – மயிர்நரைப்ப
முந்தைப் பழவினையாய்த் தின்னும் இவைமூன்றும்
நொந்தார் செயக்கிடந்த தில்.
(இ-ள்.) எதிர் நிற்கும் – (தாம் சினந்தால்) தம் எதிர்நின்று பேசும்; பெண்ணும் – மனையாளும்; இயல்பு இல் – ஒழுக்கமில்லாத, தொழும்பும் – ஏவலாளும்; செயிர் – பகை, நிற்கும் – கெடாது நிற்கும், சுற்றமும் – உறவினரும், ஆகி – ஆய் நின்று. முந்தை – முற்பிறப்பிற் செய்த, பழவினை – பழைய வினை, ஆய் – ஆகும்படி, மயிர்நரைப்ப – முதுமைப் பருவம் வரைக்கும், தின்னும் – மெலியச் செய்யும்; இவை மூன்றும் – இந்த மூன்றுக்கும், நொந்தார் – வருந்தினார், செயக் கிடந்தது – செய்யக்கூடியதாகிய, பரிகாரம் இல் – இல்லை; (எ-று.)
(க-ரை.) கணவனை எதிர்த்து நிற்கும் மனைவியும் நன்னடக்கையில்லா அடிமையும், பகை பாராட்டும் உறவினரும் பழவினைப் பயன்போற் பரிகரிக்கப்படாதவர் என்பது.
தொழும்பு : தொழிலாகு பெயர், செயிர் : குற்றம்; ஈண்டுப் பகை. மயிர் நரைப்ப என்பது முதுமைப் பருவத்தை யுணர்த்த வந்த குறிப்புச் சொல்.