பாடல் – 66
கொழுநனை இல்லாள் கறையும் வழிநிற்கும்
சிற்றாளில் லாதான்கைம் மோதிரமும் – பற்றிய
கோல்கோடி வாழும் அரசனும் இம்மூன்றும்
சால்போடு பட்ட தில.
(இ-ள்.) கொழுநனை – கணவனை, இல்லாள் – இல்லாதவளது. கறையும் – மாதவிடாயும்; வழிநிற்கும் – தன் ஏவலின் வழியில் நிற்கின்ற, சிறு ஆள் – சிற்றளை, இல்லாதான் – இல்லாதவனுடைய, கை மோதிரம் – கைவிரல் அணிந்த மோதிரமும், பற்றிய – தான் மேற்கொண்ட, கோல் – ஆளும் முறை, கோடி – தப்பி, வாழும் அரசனும் – வாழ்கின்ற அரசனும்; இ மூன்றும் – ஆகிய இம் மூன்றும்; சால்போடு – நிறையோடு, பட்டது இல – பொருந்திய சிறப்புடையன அல்லவாம்; (எ-று.)
(க-ரை.) புருடன் இல்லாதவள் பூப்பும் சிற்றாளில்லான் செங்கையாழியும், கொடுங்கோல் அரசும் சிறப்பற்றவை என்பது.
கொழுநன் – மனையாளுக்கு உறுதியாகிய துணையாயுள்ளவன். கறை – கறுப்பு, கோடு : முதனிலை; இகரம் வினையெச்ச விகுதி, சால்பு – நிறைவு; அஃதாவது அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையாகிய ஐந்து நற்குணங்களும் நிறைந்தது.
கொழுநனையில்லாள் நலனும் பாடங்கொள்ளின், நலன் என்பது அழகாம்.