பாடல் – 59
கிளைஞர்க் குதவாதான் செல்வமும் பைங்கூழ்
விளைவின்கண் போற்றான் உழவும் – இளையனாய்க்
கள்ளுண்டு வாழ்வான் குடிமையும் இம்மூன்றும்
உள்ளன போலக் கெடும்.
(இ-ள்.) கிளைஞர்க்கு – சுற்றத்தார்க்கு, உதவாதான் – உதவாதவனுடைய, செல்வமும் – பொருளும்; பைங்கூழ் – பசிய பயிர், விளைவின்கண் – தனக்குப் பயன் கொடுக்குங் காலத்து, போற்றான் – அதனைக் காக்கும் இயல்பில்லாதவனுடைய, உழவும் – உழவுத் தொழிலும்; இளையனாய் – இளையனாயிருந்து, கள்உண்டு – கள்ளைக் குடித்து, வாழ்வான் – வாழ்கின்றவனுடைய, குடிமையும் – குடிப்பிறப்பும்; இ மூன்றும் – ஆகிய இம் மூன்றும், உள்ளனபோல – நிலை நிற்பனபோலத் தோன்றி, கெடும் – அழியும்; (எ-று.)
(க-ரை.) செழுங்கிளை தாங்காதான் செல்வமும், விளையுங் காலத்திற் காவாதான் பயிரும், இளமைதொட்டே கள்ளுண்கின்றவன் நற்குடி வாழ்க்கையும் கெட்டுப்போம் என்பது.
கிளைஞர் – சுற்றத்தார், இளையன் – அறிவில் சிறியவன் எனலுமாம். தோன்றி; சொல்லெச்சம். பைங்கூழ் – பசுமை + கூழ் : பசுமை – இளமை.
1 Comment
சாந்தி மகாலிங்கசிவம் · நவம்பர் 6, 2023 at 19 h 00 min
சிறப்பு
அருமை
வாழ்த்துக்கள்