பாடல் – 54
தன்பயம் தூக்காரைச் சார்தலும் தாம்பயவா
நன்பயம் காய்வின்கண் கூறலும் – பின்பயவாக்
குற்றம் பிறர்மேல் உரைத்தலும் இம்மூன்றும்
தெற்றென வில்லார் தொழில்.
(இ-ள்.)தன்பயம் – தனக்கு வரும் பயனை, தூக்காரை – ஆராய்ந்து அதற்கு உதவி செய்யாதாரை, சார்தலும் – அடுத்தலும்; காய்வின்கண் – ஒருவன் சினமுற்ற காலத்து, தாம் பயவா – தாம் பயன்படாமல் போவனவாகிய, நல் பயம் – நன்மையாகிய பயனைத் தரும் மொழிகளை, கூறலும் – சொல்லுதலும்; பின் பயவா – பின்னே பயன் படுதலில்லாத, குற்றம் – குற்றங்களை, பிறர்மேல் – மற்றவர்கள்மேல், உரைத்தலும் – சொல்லுதலும்; இ மூன்றும் – ஆகிய இம் மூன்றும், தெற்றென – (இன்னது இன்ன பயனைத் தரும் என்பதனைத்) தேறுதல், இல்லார் – இல்லாதவருடைய, தொழில் – செய்கையாம்; (எ-று.)
(க-ரை.)தனக்கு உதவியற்றவரைச் சேர்தலும், சினமுற்ற காலத்தில் பயனற்ற மொழிகளைப் பேசுதலும், மனவருத்தத்துடன் வீணாகக் குற்றத்தைச் சாட்டுதலும் அறிவின்மையாம்.
பயம் – பயன். தூக்கார் : விணையாலனையும் பெயர். தெற்றெனவு; தெற்று என்னும் முதனிலையடியாகப் பிறந்த தொழிற்பெயர். காய்வு : தொழிற் பெயர்.