பாடல் – 53
குருடன் மனையாள் அழகும் இருள்தீரக்
கற்றறி வில்லான் தழ்ந்துரையும் – பற்றிய
பண்ணின் தெரியாதான் யாழ்கேட்பும் இம்மூன்றும்
எண்ணின் தெரியாப் பொருள்.
(இ-ள்.) குருடன் – குருடனுடைய, மனையாள் – மனைவியினது, அழகும் – அழகும்; இருள்தீர – மயக்கம் நீங்க, கற்று – (உண்மை நூலைக்) கற்று, அறிவிலான் – அதன் பொருளை அறியாதவன், கதழ்ந்து – விரைந்து, உரையும் – சொல்லுகின்ற சொல்லும்; பற்றிய – பொருந்திய, பண்ணின் – பண்களை, தெரியாதான் – அறியாதவன், யாழ் – யாழின் இசையை, கேட்பும் – கேட்டலும் ; இ மூன்றும் – ஆகிய இம் மூன்றும்; எண்ணின் ஆராயின், தெரியா – மூவர்க்கும் முறையே தெரியாத, பொருள் – பொருள்களாம்; (எ-று.)
(க-ரை.) குருடனுக்கு அவன் மனைவியழகும், படிப்பில்லாதவன் அவையிற் பேசும் பேச்சும், இசையில்லாதவன் கேட்கும் பாட்டும் பயனற்றவை என்பது.
இருள் – பேதைக்குணம் : உவமையாகு பெயர். கதழ்ந்து – கதழ் என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த வினையெச்சம். உரை : முதனிலைத் தொழிற் பெயர். யாழ் : கருவியாகுபெயர் கேட்பு : பு ஈற்றுத் தொழிற்பெயர். பற்றிய – விரும்பப்பட்ட எனலுமாம். பண் : காரிய வாகுபெயர்.