எனது இளமைக்காலங்களில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவுகளை விரும்பிக் கேட்பதுண்டு. அவரது அழகியப் பேச்சும் பேச்சின் செறிவும் எனக்குப் பிடிக்கும். அப்படியான என் மனம் கவர்ந்த வாரியார் வாக்கும் வள்ளுவர் குறளும் என்னை வியப்பிலாழ்த்தி நூலைப் படிக்க வைத்தது.
நூலின் தலைப்பிற்கேற்ப பொருத்தமான விளக்கங்களை சுவைபட விவரித்து வியக்கத்தக்க அளவுக்கு மிக சிறப்பாக வாரியாரின் சொற்பொழிவு நீதிகதைகளை பொருத்தமாக இணைத்துக் குறளுக்கு மிகப்பொருத்தமான விளக்கத்தையும் சுவைபட மிக சுருக்கமாக இன்றைய இளையத்தலைமுறை எளிதாகப் புரிந்துக் கொள்ளும் வகையில் சொல்லி இருக்கிறார் அருந்தமிழ்ச்செல்வி, நல்லாசிரியை வே. பூங்குழலி பெருமாள் அவர்கள்.
கவிதைக் கனிகளையும், தமிழிலக் கியக் கதைகளையும், இல்லறம் இனிக்கும் குடும்ப கட்டுரைகளையும், தமிழில் பிழையின்றி எழுத தமிழில் பிழையா? எனக்கேட்டு இலக்கியம் இனிக்கச்செய்தவர் இவர் என்பதால் வள்ளுவர் குறளும், வாரியார் வாக்கும் சிறப்பாகவே படிக்க, சுவைக்க, காக்க, படிப்பிக்கத்தகுந்த நூலாக அமைந்திருக்கிறது.
பக்தியையும், ஒழுக்கத்தையும் வளர்த்த வாரியாரின் கதைகளையும், குன்றா மணிக்குறளையும் இணைத்து பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் மிகச்சிறப்பாகத் தனது திருப்பணியைச் செய்திருக்கிறார் இந்நூலாசிரியர்.
பல்வேறு தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. அந்தந்த தலைப்புக் கேற்ப பொருள் விளக்கம் தந்து இந்நூல் வழி தனது புதிய சிந்தனையை விதைத்திருக்கிறார், ஆய்வாளரும், விரிவுரை யாளருமானவர் என்பதை நிரூபித்திருக்கிறார்.
நற்றமிழ் நாவரசியான பூங்குழலி யின் பேச்சாற்றலை மேடைகளில் நேரில் கண்டு வியந்திருக்கிறேன், அணிந்துரையில் தமிழ்த்திரு க. லட்சுமிநாராயனன் சொல்லியதுபோல இந்த நூல்வழி தமிழ் மண்ணில் விதைத்ததும் மாணவர்களுக்கு உழைத்ததும் வீண் போகாது என்பது நிதர்சனம்.
கதைகளுக்கு பன்னிரண்டாம் வகுப்பு மாணவி செல்வி ஸ்ரீமதி ஓவியங் கள் வரைந்திருக்கிறார் என்பது மற்றொரு சிறப்பாகும். சிறப்பு நிறைந்த இந்நூல் தமிழுலகில் பேசப்படும் என்பது நிச்சயம். இன்னும்பல மின்னும் நூல்களை தமிழுல கிற்குத் தர வேண்டுமாய் வாழ்த்துகிறேன்.
வானதி பதிப்பகம் – சென்னை வெளியிட்டுள்ள 168 பக்கங்கள் கொண்ட இந்நூலின் விலை 120 ரூபாய்.
தொடர்புகளுக்கு…
vanathipathippakam@gmail.com
Phone : 32434 2810 / 2431 0769
2 Comments
வே.பூங்குழலி பெருமாள் · செப்டம்பர் 3, 2020 at 1 h 33 min
மிகச்சிறப்பான நூல் விமர்சனம் அளித்துள்ள பிரான்சு தமிழ்நெஞ்சம் அமின் அவர்களுக்கு மகிழ்வான நன்றி கனிவான கைக்குவிப்பு
வே.பூங்குழலி பெருமாள் · செப்டம்பர் 3, 2020 at 1 h 36 min
மிகச்சிறப்பாக அனைத்துசெய்திகளையும் சொல்லிநூலை வாங்கிப்படித்துப் பயன் பெறும் வகையில். நூலவிமர்சனம் அளித்துள்ள பிரான்சு தமிழ்நெஞ்சம் அமின் அவர்களுக்கு மகிழ்வான நன்றி கனிவான கைக்குவிப்பு