இமைகள் வருடிய தாயும் எங்கே
இதயம் தொட்ட உறவுகள் எங்கே
இரக்கம் படைத்த நெஞ்சமும் எங்கே
இளமை வளமை இன்பம் எங்கே..எங்கே…?
தோளில் சுமந்த செல்வங்கள் எங்கே
தேடியச் செல்வங்கள் போனதும் எங்கே
ஓடி யாடி உழைத்த….தெல்லாம்
தேடியும் பார்த்தேன் தெரியவில்லை. இங்கே.!
ஆடி யடங்கும் வாழ்க்கை தனில்
அன்பு பாசம் அனைத்தும் எங்கே..?
முதுமை என்பதும் வேதனை தானோ
முடங்கியே நினைவுகள் சுமக்க தானோ.!
நெற்றியின் வியர்வை சிந்திய நாட்கள்
வெற்றியின் வழியிலே வித்திட நாளும்
பற்றியே சுற்றிய உறவுகள் எல்லாம்
பறந்து போனது மாயமாய் இங்கே…!
சுற்றமும் நட்பும் சூழ்ந்த வாழ்வு
முற்றும் துறந்து போன தெங்கே..?
துளிர்க்கும் இலைக்கு பழுத்த இலையே
பாட மென்பதை மறந்ததும் இங்கே .!
தேடினேன் வயதினை வாடினேன் சற்றே
தள்ளாத வயதில் சொல்லாத வலியில்
இல்லாத உறவை எண்ணியே ஏங்கி
பொல்லாத உலகம் இதுவென உணர்ந்தேன்.!
காலம் கடந்தே ஞானம் வத்தது
கலங்கிய மனமும் புரிந்தது நன்று…
வந்திடும் வயோதிகம் தந்திடும் வேதனை
முந்திட முழுதாய் சிந்தித்தல் நன்றே.!
சற்றும தளரா மனமும் உண்டு
முற்றிலு மயர்வு உண்டோ இங்கு..?
உன்னத உழைப்பே ஊன்று கோலாய்
உள்ளம் தளராத உரமும் உண்டு..!
பாடு பட்ட பணத்தின லென்றும்
பாதுகாப்பு உண்டென உணர்ந்திடு.!
நாளைய முதுமை சந்திக்கும் நீங்கள்
பதமாய் இதமாய் பற்றிடல் நன்று.!
யாசக வாசலில் நின்றிட வேண்டாம்
யாசகம் பெற்றும் வாழ்ந்திட வேண்டாம்.!
முதியோர் இல்லம் முளைத்திட வேண்டாம்
மதியும் மயங்கி மரணிக்க வேண்டாம்.!