6
பெரியார் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கியதும்… சக்திக்கு, கிராமமே நகரத்தில் இருப்பது போன்ற, உள்ளுக்குள் ஓர் உணர்வு…
‘இங்க இருந்து, நடந்தே போயிடுவோமோ..? சக்தி…’
‘ம்ம்… சரிங்க, தாத்தா..!’
பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வரும்பொழுது…
‘மல்லி… மல்லி… மல்லி…’ என்ற, ஆண் குரல் ஒரு புறம்…
‘மல்லிகைப்பூ… மல்லிகைப்பூ… மல்லிகைப்பூ…’ என்று, பெண் குரல் ஒருபுறம்…
தாத்தாவைப் பார்த்து, ‘மொழம் பத்து ரூவா.தே..! பேத்திக்கு வாங்கிக் குடுங்க.ப்பே..! தல நெறையா இருக்கும்…’ என்றதும்,
‘பாட்டி, ஹேர்பின் இல்லை.’ என்று, சக்தி சொன்னாள்.
‘வாடா..! எங்க, ஆத்தா..! மருத மீனாட்சி… நா வச்சு விடுறே…’ என்று சொல்லி, சக்தியின் ரெட்டைச்சடை இடையே… மல்லிகைப்பூவை மாலை போல தொங்கியவாரு வைத்து, தன்னிடம் இருந்து, ரெண்டு ஹேர்பின் எடுத்து குத்திவிட்டார். மூதாட்டி…
தாத்தாவும், பேத்தியும் பேசிக்கொண்டே ‘இந்த ஊருக்காரங்க, ரெம்ப பாசமானவங்க. தான தாத்தா..!
ஆமா..! அதெப்படி… தெரியும் சக்தி.மா..க்கு..?’
அந்தப் பாட்டி, ரெண்டு ரூபாய் ஹேர்பின்ன ஃபிரியா கொடுத்துட்டாங்க. தாத்தா..!
‘ம்.ம்… இந்த மண்ணின் மகிமை அப்படி…’ என்று, மதுரையின் அருமை பெருமைகளை பேசிக்கொண்டே, கோவிலுக்குள் நுழைந்தனர்.
சக்தி, பிரகாரத்தின் அகலமான வீதிகளை முன்னும், பின்னும் வியப்புடன் பார்த்துக்கொண்டே நகர்ந்தாள்.
கோவிலின் உயரமான கோபுரங்களையும், கலைநயத்துடன் இருக்கும் நிலை, மற்றும் கதவுகளை ரசித்தபடியே… மெதுவாக நகர்ந்தாள்.
‘சக்தி..! இப்படி, வேடிக்கை பார்த்துக்கிட்டே வந்தா..? ஒரு நாள் முழுசும் சுத்திப்பார்க்க பத்தாது.டா..! தங்கம். இன்னொரு தடவை வந்து, சாவகாசமாக பார்த்துக்கிறலாம்.’ என்றார் தாத்தா.
‘சரிங்க, தாத்தா..!’ என்று, தாத்தாவின் கூடவே வேகமாக நடந்து சென்றாள் சக்தி.
மீனாட்சி அம்மன் சிவப்புப் பட்டு உடுத்தி, பச்சைக்கிளி கையில் பிடித்து, வெள்ளை வைரக்கல் மூக்குத்தியோடு, தங்க ஆபரணங்கள் அணிந்து, ஜொலிஜொலிப்புடன், தத்ரூபமாக காட்சியளித்து, அருள்பாலித்தாள்..
தாத்தாவும், சக்தியும் கண் இமைக்காது மீனாட்சி அம்மனை கண்டு மனமுருகி வணங்கி, தாமரைக்குளத்து படிகளில் அமர்ந்தனர்.
மீனாட்சி அம்மன் கோவில் கட்டிய வரலாறு, கட்டிடக்கலையின் சிறப்பு, பாண்டிய மன்னர்கள் பெருமை, ஆட்சிமுறை, மற்றும் சொக்கநாதர், கள்ளழகர் உறவுமுறை… தாமரை குளத்தில் மீன்கள் இல்லாததற்கான காரணம்… என்று, தாத்தாவின் குரல்வளை தொய்வின்றி இருக்க…
யாளியின் வாயில் உள்ள உருண்டை வடிவக் கல்லை, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை… பேதம் இன்றி, உருட்டி உருட்டிப் பார்த்து, எவ்வளோ..? முயற்சித்தும், யாரும் வெளியே எடுக்கமுடியவில்லையே, என்று, வேடிக்கையாக பார்த்துச் சென்றனர்.
கனவில் வந்த அசரீயை கூறிய சம்பவம் ஒன்று, சக்தியின் ஞாபகத்தில் வந்தது.
சுற்றும், முற்றும் யாரும் பார்க்காத நேரம் பார்த்து, யாளி வாயில், உருண்டை வடிவில் இருந்த, கல் போன்ற முட்டையை, கனவில் அசரீயை சொன்னபடி உருட்டியதும்… சக்தியின் கையோடு, முட்டை வெளியில் வந்தது.
முட்டையை பாவாடைக்குள் ஒளித்து வைத்தபடி, தாத்தாவிடம் இருக்கும் தனது நகைப் பெட்டிக்குள், ஏற்கனவே இருந்த முட்டையோடு, சேர்த்து வைத்துக் கொண்டாள்.
திருடியதை, யாராவது பார்த்துவிட்டால், என்ன செய்வது..? என்று, ஒருவித பதற்றத்துடன்…
‘வாங்க, தாத்தா போகலாம்… வாங்க தாத்தா’ என்று, தாத்தாவோடு அவசரமாக, மீனாட்சி அம்மன் கோவிலை விட்டு வெளியேறினாள் சக்தி.