தொடர் 12
இதுவரை ஈரசைச்சீர் களைப் பற்றிப் பார்த்தோம் இப்போது மூவசைச் சீர்களைப் பற்றிக் காணலாம். மூவசைச் சீர்கள் இரண்டு வகைப்படும்
- காய்ச்சீர்
- கனிச்சீர்
காய்ச்சீர்
காய்ச்சீர் என்பது நான்கு வகைப்படும் ஈரசைச் சீர்கள் நான்குடன் ஒரு நேரசைச்சீர் சேர்த்தால் அது காய்ச்சீர் எனப்படும்.
தேமா ஒரு நேர் அசை சீர் சேரும்பொழுது தேமாங்காய் என காய்ச்சீர் ஆக மாறும். இவ்வாறு புளிமாவுடன் ஒரு நேரசைச்சீர் சேர்ந்து புளிமாங்காய் என்று மாறும்.
கூவிளம் மற்றும் கருவிளம் இவையும் ஒரு நேரசைச்சீர் அதாவது மாச்சீர் சேர்ந்து கூவிளங்காய் கருவிளங்காய் என மாறும்.
எளிதாக ஞாபகம் கொள்ளுங்கள்
நேர் 1
நிரை 2
இது ஏற்கனவே தெரியும்.
11 தேமா
21 புளிமா
12 கூவிளம்
22 கருவிளம்
இதுவும் தெரியும்
இப்போது இவற்றுடன் 1 சேர்த்தால் காய் ( 2 சேர்த்தால் கனி )
111 தேமாங்காய்
211 புளிமாங்காய்
121 கூவிளங்காய்
221 கருவிளங்காய்
இப்போது இதனையும் கவனியுங்கள்
ரோசா – இது தேமா
ரோசாப்பூ – இது தேமாங்காய்
காதல் – இது தேமா
காதல்பூ – இது தேமாங்காய்
மலரே – இது புளிமா
மலரேவா – இது புளிமாங்காய்
களமா – இது புளிமா
களமாடு – இது புளிமாங்காய்
தேன்மலர் – இது கூவிளம்
தேன்மலரே – இது கூவிளங்காய்
வான்முகில் – இது கூவிளம்
வான்முகிலே- இது கூவிளங்காய்
கருமுகில் – இது கருவிளம்
கருமுகிலே- இது கருவிளங்காய்
விழிமலர் – இது கருவிளம்
விழிமலரே – இது கருவிளங்காய்
வாய்பாடு
நேர்நேர்நேர் – தேமாங்காய்
நிரைநேர்நேர் – புளிமாங்காய்
நேர்நிரைநேர் – கூவிளங்காய்
நிரைநிரைநேர் – கருவிளங்காய்
அசை பிரித்தல்
ரோ / சாப் / பூ நேர்நேர்நேர் தேமாங்காய்
மல / ரே / வா நிரைநேர்நேர் புளிமாங்காய்
தேன் / மல / ரே நேர்நிரைநேர் கூவிளங்காய்
விழி / மல / ரே நிரைநிரைநேர் கருவிளங்காய்
கீழ்க்காணும் பாடலைக் காண்க
அனைத்து சீர்களும் காய்ச்சீர்களே
என்ன சீர் என்பதை நீங்களே கண்டு பிடிக்கலாமே
வானிருக்கும் நிலவினிலே வண்ணமெலாம் குடியிருக்கும் //
வண்டுவந்து தேனெடுக்க வண்ணமலர் பூத்திருக்கும் //
தேனிருக்கும் கூட்டினிலே தேன்குடிக்கும் ஈயிருக்கும் //
தென்றலெனும் காற்றுவேண்டி அவள்முகத்தில் முத்திருக்கும் //
மீனிருக்கும் வதனமதில் மேதினியோ குடியிருக்கும் //
மெருகேற்றும் முகப்பூச்சில் அழகெல்லாம் ஒளிந்திருக்கும் //
தானிருக்கும் இடத்தினையே தன்மணத்தால் வெளிக்காட்டும் //
தண்மலரின் அழகொளியோ எனைக்கிறுக்காய் மாற்றிடுமே! //