தென்றலின் தேடலில் நுழைந்தேன். அசையாதிருக்கும் மரத்தை அசைத்து அழகும், சுகமுமூட்டும் தென்றல் காற்றென நம்மையும் அழைக்கிறது தென்றலின் தேடல் கவிதை நூல்.

பாரதியின் வரவிற்குப் பின் தமிழ்ச் சமுதாயத்தில் கவிஞர்கள் பெருகி வளர, முக நூல் அவர்களுக்கு பெருங்களமாகி வளர்க்கிறது. நூலாசிரியரும் முகநூலில் சிறப்பாக வலம் வருகிறார். குழுக்களில் அடமினாக இருப்பவர்களில் எழுத முடிவதே ஆச்சர்யமெனில் எதுகை, மோனை, இயைபுவென வெகு சிறப்புடன் கவிகளையெழுதி புத்தகமாக்கியிருப்பது ஆச்சர்யம் தான்.

புத்தகத்தில் நுழைய காதல் கவிதை புத்தகமோவென எண்ணம் வர சில பக்கங்களில் கருப்பொருட்கள் மாறுகின்றன.

ரௌத்திரம் பழகென

“வெந்து வெந்து சாதல் போதும்
நொந்து நொந்து விதி வந்தே மாய்வோம் எனாதே
நஞ்சு கொண்ட மாத்தூரை வேருடன் அழி”

இன்று நஞ்சென நிறைந்து மதம், இனம், மொழியென கட்டமைக்கப்படும் கூட்டத்தைச் சாடும் நெருப்பு வரிகள். கவிஞருக்குப் பிடித்ததால் என்னவோ இரண்டு இடங்களில் இவ்வரிகள் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கின்றன…

காஜா புயல், முள்ளி வாய்க்கால் என்று மக்களுக்கும், காலத்திற்குமென கவிகள் விரிகின்றன.

பிரபலமான சின்னச் சின்ன ஆசை பாடல் போல இவரின் பேராசை கவியில்

“அன்பெனும் மழைதனைப் பொழிந்தே
அகிலம் தனை ஆளவே ஆசை
என்கிறார்…

எட்டிப் பிடித்தது என்ற நெடுங்கவியில் எதுகை, மோனை, இயல்பு விளையாடுகின்றன

“பூக்கள் அழகாய் புன்னகை பூக்கவே
ஈக்கள் வருகை இசைந்ததால்: பூக்கள்
மலர்ந்தனவே என்னுள் மனமகிழ்ந்து வீசி
மலர்ந்தது முல்லை மலர்”

நெடுங்கவி முழுக்க நம்மை இழுத்துச் செல்கிறது.. தங்கமே நீயுறங்கென தாலாட்டும் தாலாட்ட…

எது கவிதையென

“உள்ளத்தே உணர்வது ஊற்றெடுக்க
சட்டெனத் தெறிக்குமே ஓர் மின்னல்
அது கவிதை'”

என்று கவிதையின் மீதான புரிதலோடு இருக்கும் கவிகளை சிறப்பாக வடிவமைத்து புத்தகமாக்கியுள்ளது தமிழ்நெஞ்சம் பதிப்பகம்…

முடிவாய் கவிஞருக்கு வார்த்தைகளுடன் வழிகாட்டலென ஒன்றாய் கவிஞர் இன்னும் கொஞ்சம் சொற்களைக் குறைத்து கவியாக்கம் செய்ய இன்னும் கவிதைகள் செழுமையாகுமென்ற மனம் அசை போட….

“அழகான நினைவுகளில் மூழ்கிய
ஆழ்ந்த இதயத்தில்
அவ்வப்போது கேட்கும்
ரகசிய ராகங்களுடன்”….

நீளட்டும் கவிஞரின் கவிப்பயணம்..