தொடர் 13
ஹைக்கூவில் தன்மைப் பாங்கினைத் தவிர்க்கவும்..
ஹைக்கூவின் பண்புகளை குறித்து பேசும் போது கவிஞர். நிர்மலா சுரேஷ் அவர்கள் தனது ஆய்வுக் கட்டுரையில் இதனை தெரியப்படுத்தி உள்ளார்.
சில மாதங்களுக்கு முன் ஒரு பேருந்து பயணத்தின் போது முகநூலை பார்த்துக் கொண்டிருந்தேன். அது ஒரு ஹைக்கூ போட்டி. அதில் ஹைக்கூவின் விதிமுறைகள் சொல்லப்பட்டிருந்தன. ஹைக்கூவின் விதிகள் பலவோடு மேற்சொன்ன விதிகளும் இடம் பெற்று இருந்தது. பின்னூட்டத்தில் இதை கவனித்த ஒரு கவிஞர் மேற்சொன்ன இரண்டு விதிகளுக்கும் விளக்கமென்ன எனக் கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு சரியான பதிலை எவரும் தரவில்லை. எனக்கு அந்த பதிலை தர எண்ணமிருந்தது. ஆனால் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த காரணத்தால் பதில் தர இயலவில்லை. இறங்கியதும் தரலாம் என எண்ணினேன். ஆனால் இறங்கியதிலிருந்து தொடர் பணி காரணமாய் அது மறந்தே விட்டது..
இக்கட்டுரையை எழுதத்துவங்கியதுமே… இது போன்றவைகளுக்கு விளக்கம் தர வேண்டுமென ஒரு எண்ணம் அப்போதே எழுந்துவிட்டது.
முதலில் தன்மைப் பாங்கினை தவிர்த்திடல் வேண்டும். இதை காண்போம்.
தன்மை என்பதற்கு எளிய விளக்கம் தன்னை முன்னிலைப் படுத்துதல் என்பதேயாகும். நான், என், என்னுடைய, எனது போன்ற கருத்தமைந்து அல்லது வார்த்தைகளை வடிவமைத்து ஹைக்கூ வடித்தல் கூடாது என்பது தான். ஏனெனில் ஹைக்கூ என்பதே கண்முன் காணும் காட்சியை அப்படியே பதிவு செய்வது தான். இதில் கவிஞர் தன்னை முன்னிலைப் படுத்தும் போது ஒருவேளை கற்பனை பிறப்பெடுக்க நேரிடலாம். அல்லது காட்சியை மிகைப்படுத்திச் சொல்ல நேரிடலாம் என்பதனாலேயே ஹைக்கூவில் தவிர்க்க கூறினர்.
மேலும் ஹைக்கூ இயற்கையை பாடுவதாகும். புத்தமத ஜென் சிந்தனையை ஏற்றிக் கூறவே ஹைக்கூ ஜப்பானில் கையாளப் பட்டது. எனவே அங்கு கவிஞர்கள் “தன்னை” முன்னிலைப் படுத்தும் வகையில் ஹைக்கூவை பெரும்பாலும் வடிவமைக்கவில்லை.
நமது தமிழ்நாட்டில்… இந்த விதியானது கவிஞர் நிர்மலா சுரேஷ் தனது ஆய்வுக் கட்டுரை வாயிலாக 1990 க்கு பிறகே ஹைக்கூவின் பண்புகளென வரைமுறை செய்து எழுதினார். அதற்கு முன் சிலரது கவிதைகளில் தன்மைப் பாங்கு இடம் பெற்றே இருந்தது. ஆனால் இப்போது பலரும் இதனை தவிர்த்தே எழுதி வருவது சிறப்புக்குரியதே யாகும்.
இருண்மையை ஹைக்கூ ஏற்காது
இருண்மை என்பதும் நம்மை மிரட்டும் ஒரு வார்த்தை பிரயோகமே. புரிபடாத அல்லது குழப்பமேற்படுத்தும் வார்த்தை பிரயோகத்தை ஹைக்கூவில் மேற் கொள்ளுதல் கூடாது என்பதே இதன் எளிய பொருள்.
சிலரது கவிதைகள் குழப்பத்தை ஏற்படுத்தும் வண்ணமே அமைந்திருக்கும். தெளிவான பொருளும் அல்லாது, தெளிவான கருத்தும் இல்லாது, புரிதலற்ற ஒரு நிலையை வாசகனிடத்தில் ஏற்படுத்தும் விதமாய் ஹைக்கூவை எழுதுவது தவறு..
சொல்லவரும் கருத்தை தெளிவாக, கவிதையின் கருவிற்கு அருகில் நின்று தெளிவுபட சொல்ல வேண்டும் என்பதே ஹைக்கூவின் சித்தாந்தம்.
எளிய வார்த்தைகள் போதும். இலக்கியத்தரமான வார்த்தைகள் கூட தேவையில்லை. மற்றவர்களை மிரட்டும் படியான சொற்கோவையும் தேவையில்லை. ஹைக்கூ… நாம் காணும் காட்சியை எவ்வித ஒப்பனையுமின்றி உள்ளபடி சொல்லி நகர வேண்டுமென்பதே இக்கவி வடிவமாகும்.
ஆழ்ந்த கருத்தினை உள்ளமையுங்கள். வாசகரை ஆழ்ந்து சிந்திக்க வையுங்கள். உங்களது கவிதை பல கோணங்களாய் விரிவடைய வேண்டும். வாசிக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொருவித கோணங்களில் சிந்திக்க வேண்டும். எழுதப்பட்ட ஒரு ஹைக்கூ வாசித்து முடிந்தபின் ஒரு காட்சியென விரியவேண்டும். ஆழ்ந்த சிந்தனையை விதைக்க வேண்டும்.
தகனமேடைக்கு
அருகில் தான்
காத்திருப்போர் அறை..!
- அன்பழகன் ஜி.
எவ்வளவு வீரியம் இதில் ஒளிந்து கொண்டிருக்கிறது. இன்று ஒன்று. நாளை அது நீயாகவும் இருக்கலாம் என சொல்லாமல் சொல்லி நகரும் அதிசயமே ஹைக்கூ.