புயலாலே உருக்குலைந்து புலரவில்லை எம்வாழ்வு .
மயங்கியுமே வீழ்ந்தோமே மறுவாழ்வும் இல்லையினி .
பயம்கொண்ட நெஞ்சத்தைப் பாதுகாப்போர் யாருண்டு 
பயன்பட்ட நிலமெல்லாம் பாழ்பட்ட சோகமிங்கே !!

ஆசையாக வளர்த்தோமே அழகழகாய்த் தென்னையினைப்
பாசமாக வைத்திட்டப் பனைமரங்கள் காணலையே !
காசைநம்பி வாழ்வெல்லாம் கஜாவினால் போனதைய்யா !
தேசுடைய மாமரமும் தெருவினிலே கிடக்குதைய்யா !!

உயிருள்ள மரமெல்லாம் உணர்வற்று சாய்ந்ததுவே !
உயிரற்ற மின்கம்பம் உறவற்று வீழ்ந்ததுவே !
பயிரெல்லாம் அழுகிப்போய் பயனற்று மூழ்கியதே !
வயிறெல்லாம் எரிகிறதே வாழவழி உண்டாசொல் !!

சோழமண்ட லமெல்லாமே சோறின்றி வாடுதைய்யா !
ஆழமாக வைத்தமரம் ஆங்காங்கே கிடக்குதைய்யா !
பாழடைந்த வீட்டினையே பார்த்தேதான் கலந்குதைய்யா !
ஊழித்தாண் டவமிங்கே ஊரெல்லாம் கதறுதைய்யா !!

மனசெல்லாம் கலங்கிடுதே மக்களினம் வாடுதைய்யா !
இனமெல்லாம் அழிந்திடுதே இனிமேலே என்செய்வோம் !
சினமெல்லாம் இயற்கைமேலே சிந்திக்கத் தோனுதைய்யா !
வனமெல்லாம் போச்சுதையா வந்திடிடுமா நல்வாழ்வு !

உணவுக்குக் கையேந்த உயிருக்கும் கையேந்த
பணத்திற்கும் விலைபேசும் பனைமரமாய் எம்வாழ்வு .
மணம்தருமா இனிமேலும் மனிதநேயம் பேசிடுமா !
குணமுள்ள மானிடரே குறைவின்றி உதவுங்கள் !!

உலகிற்கே சோறிட்ட உள்ளமின்று கண்ணீரில் .
பலர்நோக்க எம்குடிகள் பரிதவிக்கும் துயரமிங்கே !
சிலபேரின் சேவையினால் சீர்ப்படுமா சொல்லுங்கள்
உலர்கின்ற நாவுக்கே உதிரத்தைத் தந்திடுங்கள் !!

இருட்டினிலே எம்வாழ்க்கை இரவினிலே உறக்கமின்மை
அருமையான செடிகொடிகள் அடித்திட்ட புயலும்தான்
உருத்தெரியா நிலையினையே உருவாக்கி விட்டதுவே !
எருவெல்லாம் காணலையே எத்திக்கும் ஓலங்கள் !!

குடிப்பதற்குத் தண்ணீரும் குலம்வாழ இல்லையில்லை .
படிப்பதற்குப் புத்தகங்கள் பலருக்கும் இல்லையில்லை
நடிக்கின்றார் பலருந்தான் நாடகமா எம்மினமும் .
வெடிக்கின்ற ஆற்றாமை வெந்தழலில் வாடுகின்றோம் !!

தாயுள்ளம் கொண்டோரே தன்னார்வத் தொண்டோரே
சேயான நாங்கெல்லாம் சேருமிடம் தெரியாது
நோயுற்ற வாழ்வினிலே நொந்தும்தான் கிடக்கின்றோம் .
பாயின்றிப் படுக்கையின்றிப் பனியினிலே வாடுகின்றோம் .

வாழ்வளிக்க வாருங்கள் வருத்தத்தைப் போக்குங்கள்
தாழ்நிலையை நீக்குங்கள் தர்மங்கள் செய்திடுங்கள் !
காழ்ப்புணர்ச்சி வேண்டாவே கலக்கத்தைப் போக்குங்கள் .
ஆழ்மனத்தில் உள்ளதையே ஆக்கினேனே கவிதையாக !!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »