மலராத மொட்டதனின் இதழ்கி ழித்து
மதுவுண்ட வண்டொன்றைப் பார்த்த துண்டா
புலராத இரவுக்குள் புணர்தல் போன்று
புரிந்திட்டார் வன்செயலைக் கயவர் சில்லோர் !
வலம்வந்து வலம்வந்தே அழகு மொட்டை
வன்புணர்வில் சீரழித்தார் துடிது டிக்க
நிலம்மீதில் எவ்வுயிரும் செய்தி டாத
நீசசெயல் செய்வதெல்லாம் மனிதர் தாமே !
பூக்காத இளமானைக் கொம்பு மான்தான்
புணர்ந்திட்ட காட்சிதனைக் கண்ட துண்டா
தூக்கத்தில் சுகம்காணும் இரவுப் போழ்தில்
துணைவியுடன் இணைதல்போல் இணைந்தார் புல்லர் !
கூக்குரல்தாம் எழுமுன்னே வாயைப் பொத்திக்
குற்றுயிராய் ஆக்கிட்டார் இளங்கு ருத்தை
நாக்குடைய எவ்வுயிரும் செய்தி டாத
நாசசெயல் செய்வதெல்லாம் மனிதர் தாமே !
மயிலிறகைப் பிய்த்தல்போல் பிய்த்தெ றிந்தார்
மணம்வீசா மொட்டதனைக் கசக்கெ றிந்தார்
வெயிலினிலே துடித்திட்டப் புழுவைப் போல
வேதனையில் துடித்தபோதும் புணர்ந்தெ றிந்தார் !
குயில்கூவும் முன்னதனின் கழுத்த றுத்துக்
குருதியிலே மிதக்கவிட்ட கொடுங்கோ லோரைக்
கயிற்றினிலே கட்டியந்த உறுப்ப றுத்துக்
கதறிடவே நடுத்தெருவில் நிறுத்த வேண்டும் !
(சென்னையில் சிறுமியைப் பதினேழு கயவர்கள் கெடுத்த
கொடுஞ்செய்தியைப் படித்தால் எழுந்த சினக்கவிதை)