பாடல் – 51
தூர்ந்தொழுகிக் கண்ணும் துணைகள் துணைகளே
சார்ந்தொழுகிக் கண்ணும் சலவர் சலவரே
ஈர்ந்தகல் இன்னாக் கயவர் இவர்மூவர்
தேர்ந்தக்கால் தோன்றும் பொருள்.
(இ-ள்.) தூர்ந்து – (பொருள்வருவாய்) அடைபட்டு ஒழுகிக் கண்ணும் – (இல்லாமல்) வாழுமிடத்தும், துணைகள் – உறவாவோர், துணைகளே – உறவினரே யாவர்; சார்ந்து – கருத்துக்கு இணங்கி, ஒழுகிக் கண்ணும் – நடந்தவிடத்தும், சலவர் – பகைவர், சலவரே – பகைவரே; இன்னா – துன்பஞ் செய்யுங் குணமுள்ள, கயவர் – கீழ்மக்கள், ஈர்ந்த – பிளக்கப்பட்ட கல் – கல்லை ஒப்பாவார்; இவர் மூவர் – இவர் மூவரும், தேர்ந்தக்கால் – (அறிவுடையோர்) ஆராயுமிடத்து; தோன்றும் – வெளிப்படும், பொருள் – பொருள்களாவார்; (எ-று.)
(க-ரை.) வறுமைக் காலத்தும் உறவினர்களே உதவி புரிபவர்; எவ்வளவு நெருங்கிப் பழகினும் பகைவர் பகைவரே,கற்பிளப்பைப்போல் என்றும் ஒன்று கூடாதவர் அற்பர்; இவர்கள் தன்மை ஆராய்ந்து சொல்லப்பட வேண்டுபவை.
ஒழுகியக்கண் என்பதில் அகரம் தொக்கு ஒழுகிக் கண் என்று வந்தது; கண் : ஈற்று வினையெச்சம். தேர்ந்தக்கால் : இது கால் ஈற்று வினையெச்சம். உம் இரண்டும் இறந்தது தழீஇயதனோடு உயர்வு சிறப்பில் வந்தன. ஏ இரண்டும் தேற்றம் – துணை : பண்பாகு பெயர். கல், பொருள் : இரண்டும் உவமையாகு பெயர்கள். தேர்ந்தக்கால் தோன்றும் பொருள். எனவே, தேராவிடத்து இத்தன்மையது எனத் தோன்றாப் பொருளாவார்.