பாடல் – 47
சில்சொற் பெருந்தோள் மகளிரும் பல்வகையுந்
தாளினால் தந்த விழுநிதியும் – நாடோறும்
நாத்தளிர்ப்ப ஆக்கிய உண்டியும் இம்மூன்றும்
காப்பிகழல் ஆகாப் பொருள்.
(இ-ள்.) சில்சொல் – மெல்லிய சொல்லையும், பெரும்தோள் – பெரிய தோள்களையுமுடைய, மகளிரும் – பெண்டிரும்; பல்வகையும் – பலவகையாலும், தாளினால் – முயற்சியினால், தந்த – தேடிய, விழுநிதியும் – சிறப்பாகிய பொருளும், நாள்தோறும் – எப்பொழுதும், நா – நாக்கு, தளிர்ப்ப – நீர் அருந்தும்படி, ஆக்கிய – சமைத்த, உண்டியும் – உணவும்; இ மூன்றும் – ஆகிய இம்மூன்றும், காப்பு – காத்தலை, இகழல் ஆகா – தாழ்த்திக் கூறுதலாகாத, பொருள் பொருள்களாம்; (எ-று.)
(க-ரை.) பெண்டிரும், பொருளும், உண்டியும் காப்பாற்று முறையில் காப்பாற்றப்படாமற் போனால் கெட்டுப்போம் என்றபடி.
சிறுசொல் என்பது சில்சொல் என்றாயிற்று. சிறுமை நிரம்பாமை. தந்த : இடவழுவமைதி, விழுநிதி : பண்புத்தொகை நிலைத்தொடர். தோறு : ஏழாம் வேற்றுமை இடப் பொருண்மையையும் பன்மையையும் உணர்த்தும் இடைச்சொல். உண்டி தொழிலடியாகப் பிறந்த பெயர்.