பாடல் – 46
கல்தூய்மை யில்லாக் கலிமாவுங் காழ்கடிந்து
மேல்தூய்மை யில்லாத வெங்களிறுஞ் – சீறிக்
கறுவி வெகுண்டுரைப்பான் பள்ளிஇம் மூன்றும்
குறுகார் அறிவுடை யார்.
(இ-ள்.) கால் – நடையில், தூய்மை – தூயது ஆகுந் தன்மை, இல்லா – இல்லாத, கலிமாவும் – குதிரையும், காழ் – கட்டுத்தறியை, கடிந்து – முறித்து, மேல்தூய்மை – (வீரனிருப்பதற்கேற்ற) மேலிடம் தூயதாம் தன்மை, இல்லாத – உடையதாயிராத, வெங்களிறும் – கொடிய யானையும்; கறுவி – (மாணாக்கன் மேல்) வைரமடைந்து; சீறி – சீற்றங்கொண்டு, வெகுண்டு – சினந்து, உரைப்பான் – (பாடம்) சொல்லுவோனுடைய, பள்ளி – கல்விச்சாலையும்; இ மூன்றும் – ஆகிய இம் மூன்றையும், அறிவு உடையார் – (அவற்றின் பயனின்மையை) உணர்தலுடையார், குறுகார் – சேரார்; (எ-று.)
(க-ரை.) நடைச் சிறப்பற்ற குதிரையும், ஏறிச்செல்ல உதவாத யானையும், முகமலர்ச்சியுடன் கூறாதான் பள்ளியும் வீண் என்பது.
கால் : எண்ணலளவை யாகுபெயராகிய கால் என்பது முதலாகு பெயராய் நடையை யுணர்த்தியது. இந் நடை ஐவகைப் படும். அவை : மென்னடை, விரைநடை, ஆடுநடை, சுற்றுநடை, ஓட்டநடை, கலிமா – கலினமா என்பது னகரந்தொக்கு மருவியது போலும். கலினம் – கடிவாளம் : கலிக்கின்ற மா என்னலுமாம். கலித்தல் – கனைத்தல். காழ் : பண்பாகு பெயர். சீற்றம் – சிறிது பொழுது நிகழும் சினம். பள்ளி : உம் தொக்கது. குறுகார் : எதிர்மறை வினைமுற்று.