பாடல் – 45
ஆற்றானை யாற்றென் றலைப்பானும் அன்பின்றி
யேற்றார்க் கியைவ கரப்பானும் – கூற்றம்
வரவுண்மை சிந்தியா தானுமிம் மூவர்
நிரயத்துச் சென்றுவீழ் வார்.
(இ-ள்.) ஆற்றானை – (தான் குறித்த தொழிலை) செய்யத் திறமையற்ற ஏவாலளனை, ஆற்று என்று – செய் என்று ஏவி. அலைப்பானும் – வருத்துகின்றவனும்; ஏற்றார்க்கு – தன்னிடத்தில் வந்து இரந்தவர்க்கு, இயைவ – (கொடுப்பதற்கு) இசையும் பொருளை, அன்பு இன்றி – அன்பு இல்லாதவனாகி, கரப்பானும் – மறைத்து இல்லையென்று சொல்லும் செல்வனும், கூற்றம் – யமன், வரவு உண்மை – வருதலது உண்மையை, சிந்தியாதானும்- நினையாமல் தீமையைச் செய்தோனும்; இ மூவர் – ஆகிய இம் மூவரும், சென்று – உடல் அற்று நீங்கி, நிரயத்து – நரகத்தில் வீழ்வார் – விழுவார்; (எ-று.)
(க-ரை.) செயல்வலி அற்ற ஏவலாளனை வேலைவாங்குவோனும், இரந்தவர்க்கு இயைந்ததில்லை யென்று சொல்வோனும், இறப்பை நினையாது தீத்தொழில் புரிவோனும் நரகத்து வீழ்வர்.
ஆற்றான் :வினையாலணையும் பெயர். ஆற்று : ஆல் விகுதி புணர்ந்துகெட்டு நின்ற ஏவலொருமை வினைமுற்று. ஏற்றார் இயைவ :வினையாலணையும் பெயர்கள் : ஏல், இயை : முதனிலைகள்,நிரயம் : வடசொல்.