பாடல் – 44
விருந்தின்றி யுண்ட பகலுந் திருத்திழையார்
புல்லப் புடைபெயராக் கங்குலும் – இல்லார்க்கொன்
றீயா தொழிந்தகன்ற காலையும் இம்மூன்றும்
நோயே யுரனுடை யார்க்கு.
(இ-ள்.) விருந்து இன்றி – விருந்தினரை இல்லாமல், உண்ட – தனித்து உண்ணக் கழிந்த, பகலும் – பகற்பொழுதும், திருந்து இழையார் – திருந்திய அணிகளை அணிந்த மனைவியரை, புல்ல – பொருந்துவதால், புடை பெயரா – கழிதல் இல்லாத, கங்குலும் – இரவும்; இல்லார்க்கு – வறியவர்க்கு, ஒன்று – ஒன்றை, ஈயாது – கொடாமையினால், ஒழிந்து அகன்ற – கழிந்த, காலையும் – நாளும்; இ மூன்றும் – ஆகிய இம் மூன்றும், உரன் உடையார்க்கு – அறிவுடையார்க்கு, நோயே – (நினைக்குந்தோறும்) நோய்களாம்; (எ-று.)
(க-ரை.) விருந்தில்லாப் பகலும், மனைவியில்லா இரவும், வறிஞர்க் கீயாக் காலைவேளையும் அறிவுடையோர்க்கு நோய் செய்வன.
பகல் : தொழிலாகுபெயர். ஈயாது : வினையெச்சம். ஒழிந்து அகன்ற : ஒரு பொருட் பன்மொழி. நோயைத் தருபவற்றை நோய் என்றது காரணத்தைக் காரியமாகக் கூறுவதோர் உபசார வழக்கு. உரன்; உரம் என்பதன் போலி. உடையார் : உடைமை என்னும் பண்படியாகப் பிறந்த குறிப்பு வினையாலணையும் பெயர் திருந்திழையார் என்பதற்கு மேற்பொருளின்றி, திருந்து என்பதை இழைக்கு அடையாகக் கொள்ளாது பொருள் சிறப்புக்கருதி இழையார் என்பதற்கு அடையாகக் கொள்வதும் ஆம். இழை – அணி : தொழிலாகுபெயர்