பாடல் – 43
வாயின் அடங்குதல் துப்புரவாம் மாசற்ற
செய்கை யடங்குதல் திப்பியமாம் . பெய்யின்றி
நெஞ்ச மடங்குதல் வீடாகும் இம்மூன்றும்
வஞ்சத்திற் றீர்ந்த பொருள்.
(இ-ள்.) வாயின் அடங்குதல் – தீவழிச் செல்லாமல் காக்குதலால், துப்புரவு ஆம் – இப்பிறப்பில் அனுபவிக்கப்படும் செல்வம் உண்டாகும்; செய்கை – உடலின் செய்கை, அடங்கல் – அடங்குதலால், மாசு அற்ற – குற்றம் அற்ற, திப்பியம் ஆம் – (மறுமையில்) தெய்வப் பிறப்பு உளதாகும்; பொய் இன்றி – உண்மையாக, நெஞ்சம் – மனம், அடங்குதல் – அடங்குதலால், வீடு ஆகும் – முத்தி உள்ளதாகும், இ மூன்றும் – இம் மூன்று அடக்கமும், வஞ்த்தின் – பொய்யினின்றும், தீர்ந்த – நீங்கிய, பொருள் – பொருள்களாகும்; (எ-று.)
(க-ரை.) உளம், உரை, செயல் ஆகிய மூன்றும் அடக்கமாயிருப்பவர் முத்தி யடைவர்.
துப்புரவு – உறுதியான அனுபவம்; இங்குச் செல்வம், திப்பியம் : திவ்வியம் என்ற வட சொற்றிரிபு : சொர்க்கத்தில் பிறப்பது என்பது பொருள். வீடு – அவா முதலியவற்றை விடுதலால் உளதாகும் முத்தி : காரணவாகு பெயர். நெஞ்சம் : இடவாகு பெயர். வஞ்சத்தின் : இன் ஐந்தனுருபு, நீக்கப் பொருள்.