பாடல் – 37
குறளையுள் நட்பளவு தோன்றும் உறலினிய
சால்பினிற் றோன்றுங் குடிமையும் – பால்போலுந்
தூய்மையுட் டோன்றும் பிரமாணம் இம்மூன்றும்
வாய்மை யுடையார் வழக்கு.
(இ-ள்.) குறளையுள் – பொருட்சுருக்கத்தினால், நட்பு அளவு – ஒருவன் நட்பின் எல்லை, தோன்றும் – காணப்படும்; உறல் இனிய – பொருந்துதற்கு இனிய, சால்பினில் – (நற்குணச் செய்கைகளின்) நிறைவில், குடிமை – உயர்குடிப் பிறப்பின் தன்மை, தோன்றும் – விளங்கும்; பால் போலும் – பால்போன்ற, தூய்மையுள் – மனம் தூயனாந் தன்மையினால், பிரமாணம் – (நிலையினது) அளவு, தோன்றும் – விளங்கும்; இமூன்றும் – இந்த மூன்றும், வாய்மை உடையார் வழக்கு – உண்மை கூறும் பெரியோரது நெறியாம்; (எ-று.)
(க-ரை.) நட்பளவு, குடிமை, பிரமாணம் இம்மூன்றும் ஒரு தன்மையவாய் நல்லாரிடத்து நிற்கும்.
குறளையுள்; குறு : பகுதி, அள் : தொழிற்பெயர் விகுதி, ஐ : சாரியை, உள: ஏழனுருபு, ஏதுப்பொருளில் மயங்கிற்று. குறளையுள் நட்பளவு தோன்றும் என்பதற்கு (நட்பின ரிருவரைப் பிரிக்கும்படி ஒருவன் சொல்லும்) கோட்சொல்லில் அக்கோளைக் கேட்டோனது நட்பினது அளவு விளங்கும் என்றுங் கூறலாம். பாலில் பிரை முதலிய பொருள்களுள் ஒன்று கலக்கின், அது கெடுதல் போல, மனத்தூய்மையில் காமம் முதலிய குற்றம் மூன்றனுள் ஒன்று கலக்கினும் அத் தூய்மை கெடுமாதலால், பால் போலுந் தூய்மை எனப்பட்டது. வாய்மையுடையார் வழக்கு – மெய்ந்நெறியுடையார் ஒழுங்கு எனலுமாம். வழக்கு : முதனிலை திரிந்த தொழிற்பெயர்; தொழிலாகுபெயருமாம். சால்பினில் : இல் : ஐந்தனுருபு, ஏதுப்பொருள்.