பாடல் – 35
முந்நீர்த் திரையின் எழுந்தியங்கா மேதையும்
நுண்ணூற் பெருங்கேள்வி நூற்கரை கண்டானும்
மைந்நீர்மை இன்றி மயலறுப்பான் இம்மூவர்
மெய்ந்நீர்மை மேனிற் பவர்.
(இ-ள்.) முந்நீர் – கடலில், திரை – அலைபோல, எழுந்து (தன்மனம்) எழுந்து, இயங்கா – அலையாத, மேதையும் – அறிவுடையவனும்; நுண் – நுட்பமாகிய, நூல் – சிந்தனையினாலும், பெரும் கேள்வி – மிகுதியாகிய கேள்வியினாலும், நூல்கரை – நூல்களின் முடிவை, கண்டானும் – (ஐயந்திரிபறக்) கண்டவனும்; மைந்நீர்மை – குற்றத் தன்மை, இன்றி (தன்னிடத்தில்) உண்டாகாதபடி, மயல் – மனக்கலக்கம், அறுப்பான் – ஒழித்தவனும்; இம்மூவர் – ஆகிய இம் மூவரும், மெய் நீர்மை – அழிவின்மையாகிய தன்மையுடைய, மேல் – முத்தி உலகத்தில், நிற்பவர் – நிற்பவராவர்; (எ-று.)
(க-ரை.) மெய்ப்பொருள் காணும் அறிவுடையவனுக்கும், நூல் தேர்ச்சி மிகுந்தவனுக்கும், உலகப் பற்றைவிட வல்லவனுக்கும் முத்திபெற ஏது உண்டு.
முந்நீர் – கடல் : படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலைச் செய்யவல்ல நீர் : காரணக்குறி; இனி ஆற்றுநீர், ஊற்றுநீர், வேற்றுநீர் ஆகிய மூன்று நீரும் சேர்ந்தது எனவும் கொள்ளலாம். பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. திரை : தொழிலடியாய்ப் பிறந்த பெயர். இன் : ஐந்தனுருபு, ஒப்புப்பொருள். இயங்குதல் – நடத்தல், செல்லுதல். மேதை – அறிவுடைமை, இங்குப் பண்பாகு பெயர்; அறிவுடையவனுக்காயிற்று. நுண்ணூல் – நுண்மையாகிய நூல், நூற்கரை : ஆறாம் வேற்றுமைத் தொகை. நூல்போலுதலின் : உவமையாகு பெயர். மை – காமம், வெகுளி, மயக்கம் ஆகிய முக்குற்றங்கள். மேல் : பண்பாகு பெயர்.