பாடல் – 18
ஒருதலையான் வந்துறூஉ மூப்பும் புணர்ந்தார்க்
கிருதலையு மின்னாப் பிரிவு – முருவினை
யுள்ளுருக்கித் தின்னும் பெரும்பிணியு மிம்மூன்றுங்
கள்வரி னஞ்சப் படும்.
(இ-ள்.) ஒருதலையான் – உறுதியாக, வந்துறூஉம் – வந்தடையும், மூப்பும் – கிழப்பருவமும்; புணர்ந்தார்க்கு – நட்பினருக்கு, இருதலையும் – (பிரியப்பட்டவரும் பிரிந்தவரும் ஆகிய) இரண்டிடத்தும், இன்னாப் பிரிவும் – துன்பத்தைத் தருகின்ற பிரிவும்; உருவினை – உடம்பை, உள் – உள்ளிடத்துள்ள தசை முதலியவற்றை, உருக்கி – கரையச் செய்து, தின்னும் – வருத்துகின்ற, பெரும் பிணியும் – (மருந்து முதலியவற்றால்) தீராத நோயும்; இ மூன்றும் – ஆகிய இம் மூன்றும், கள்வரின் – கள்வர்க்கு அஞ்சுவது போல், அஞ்சப்படும் – பயப்படப்படும்; (எ-று.)
(க-ரை.) கள்வருக்கு அஞ்சி எச்சரிக்கையாயிருப்பது போல உறுதியாக வரக்கூடிய மூப்பு, நண்பரிருவர்க்கும் விருப்ப மில்லாத பிரிவு, உரு அழிக்கும் நோய் இம் மூன்றுக்கும் அஞ்சிச் செய்ய வேண்டுவன செய்து எச்சரிக்கையா யிருக்கவேண்டும்.
ஒருதலையான் என்பதற்குக் கணவன் மனைவி என்னும் இருவருள் ஒருவரிடத்து எனலுமாம். பருவம் முதலிய ஒத்த தலைமகனும், தலைமகளும் மணத்தல் மரபாதலால் ஒருதலையான் எனப் பொதுப்படக் கூறப்பட்டது. இருதலை : தலை – இடம், இது தலைமகன் தலைமகள் என்ற இருவரையுங் குறிக்கும்; பன்மையில் ஒருமை வந்த பால்வழுவமைதி. இன்னாப் பிரிவு : இன்னாமையைத் தரும் பிரிவு எனின் இரண்டாம் வேற்றுமைத் தொகை; இன்னாமையாகிய பிரிவு : பண்புத்தொகை. உறு : பண்பாகு பெயர், உள் : இடவாகு பெயர். உருக்கி : உருக்கு என்னும் பிறவினைப் பகுதியடியாகப் பிறந்த வினையெச்சம். பெரும்பிணி – பெருமையாகிய பிணி : பண்புத்தொகை, பெருமையாவது மருந்துண்ணல், மந்திரித்தல், மணி முதலியன தானஞ் செய்தல் இவைகளால் தணியாமை. கள்வரின் : இன் ஐந்துனுருபு ஒப்புப் பொருள். அஞ்சப்படும் : ஒரு சொல் நீர்மைத்து.