பாடல் – 16
மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும் மாசில்சீர்ப்
பெண்ணினுட் கற்புடையாட் பெற்றானும் – உண்ணுநீர்
கூவல் குறைவின்றித் தொட்டானும் இம்மூவர்
சாவா உடம்பெய்தி னார்.
(இ-ள்.) மண்ணின்மேல் – மண்ணுலகத்தில், வான் – பெரிய, புகழ் – புகழை, நட்டானும் – நிலைநிறுத்தினவனும், பெண்ணினுள் – பெண்களுள், மாசுஇல் – குற்றமற்ற, சீர் – சிறப்புடைய கற்பு உடையாள் – கற்புடையவளை, பெற்றானும் – (மனைவியாகப்) பெற்ற கணவனும், உண்ணு நீர் – உண்ணப்படுகின்ற நீர் குறைவு இன்றி – குறைவுபடாதபடி, கூவல் – கிணறுகளை, தொட்டானும் – தோண்டி வைத்தவனும், இ மூவர் – ஆகிய இம் மூவரும், சாவா – (எக்காலத்தும்) இறவாத, உடம்பு – (புகழ்)உடலை, எய்தினார் – பெற்றவராவார்; (எ-று.)
(க-ரை.) உலகத்தில் ‘ஈதல் இசைபட வாழ்தல்’ என்ற பொய்யாமொழிக்கிணங்க, இரப்பவர்க்கு ஈந்து சிறந்த புகழை நாட்டியவனும், சிறந்த கற்புடைய மனைவியைப் பெற்றவனும் நீரறாத கிணறு முதலியவற்றைத் தோண்டி வைத்தவனும் இறந்தும் இறவாத புகழுடம்பைப் பெற்றவராவார்.
மண் : கருவியாகு பெயர். நட்டான், தொட்டான், பெற்றான் என்பவை நடு, தொடு, பெறு என்ற வினைப் பகுதியடியாகப் பிறந்த விளையாலணையும் பெயர்கள், பெண்: சாதியொருமை சீர் கற்பு – சீரும் கற்பும் எனக் கொள்ளுமிடத்து எண்ணும்மை தொக்கது. கற்புடையாட் பெற்றான் – உயர்திணைப் பெயராயினும், இரண்டாம் வேற்றுமைத் தொகையாதலால், ளகரம் டகரமாகத் திரிந்தது. கூவல் : கூவம் என்பதன் போலி, பூத உடம்பு அழிந்தும்,அதனாலாய புகழுடம்பு அழியாதிருத்தலால் சாவா வுடம்பு எனவும், அம் மூவரும் என்றும் உளர்போல விளங்குதலின் உடம்பு எய்தினார் எனவுங் கூறினார்.