கம்பனைப்போல் இனியொரு கவியைப் பெறமுடியுமா ? அழகான சொல்லோவியம் அவனது இராமாயணப் பாடல்களில் காண முடிகிறது.
இந்தக் காட்சியைப் பாருங்கள்:
கைகேயி தனது வரத்தால் இராமனைக் காட்டுக்கு அனுப்பவும் தனது மகன் பரதன் நாடாளவும் மேற்கொண்ட செயல்களால் வெகுண்டெழுந்தான் இராமனின் தம்பி இலக்குவன்.
”உனக்குரிய அரசைப் பறித்த கைகேயியையும் அதற்கு
உடந்தையாயிருந்த தசரதன் முதலானவர்களையும் உடனே கொன்று உனக்குப்பட்டாபிசேகம் செய்து வைக்கிறேன்”
…என்று சீறி நின்ற இலக்குவனைப் பார்த்து இராமன் அறிவுறுத்துவதாக கம்பன் மிக அழகாகக் கூறுகிறான்.
”நதியின் பிழையன்று நறும்புனலின்மை; அற்றே
பதியின் பிழையன்று பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழையன்று, மகன் பிழையன்று மைந்த!
விதியின் பிழை! நீ இதற்கென்னை வெகுண்டதென்றான்!”
”மூவுலகையும் வெல்லும் திறன் உனக்கு இருக்கிறது. நன்கறிவேன். நான் சொல்வதைக்கேட்டு
சினம் கொள்ளாது தணிவாய். வளமான நல்ல தண்ணீர் வரவில்லையெனில் (வற்றிவிட்டாலும் ) அது நதியின் பிழையாகுமா ? நல்லறமாகிய வாய்மையைக் காப்பாற்றிய நம் தந்தையின் பிழையல்ல. தந்தையின் உத்தரவால் கைகேயி ஆணையிட்டாள்.
இதில் அவளின் பிழையும் இல்லை. இது அறிவின் பிழை என்றும் கொள்ளக்கூடாது. மகன் பரதனின் குற்றமும் இல்லை லட்சுமணா… இது விதியின் குற்றம். எனவே அறத்திற்கு எதிராக சினம் கொண்டு எழுதல்கூடாது. ”
என்று விளக்கும் இராமனின் சொற்களால் இலக்குவன் சினம் தணிகிறான் என்றே அருமையாய் கம்பர் தனது கவி ஆற்றலை வெளிப்படுத்துகிறார்.
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டுகிறது என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் சொன்னதை முன்பே கம்பன் மதியின் பிழையன்று இது விதியின் பிழை என்று கூறுகிறார்…..நதியில் எப்போதுமே நீர் நிறைந்து காணப்படுதல் அரிது. அப்படி இருப்பினும் தூய நீரின்றி மாசுடன் காணப்பட்டாலும் அது நதியின் பிழையல்ல என்று எடுத்துக் கூறுவதில் கம்பனுக்கு நிகர் கம்பனே.
இக்கருத்தையே கவியரசர் கண்ணதாசனும் தனது திரையிசைப் பாடல் வழி…
”நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
பறவைகளே பதில் சொல்லுங்கள்
மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்
மனதிற்கு மனதை கொஞ்சம் தூது செல்லுங்கள்
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா”
என இன்று கம்பனின் கனிரச இன்பத்தை நமக்களித்தார்.