கவிதை என்பது வெறும் வார்த்தைகளால் எழுதப்படுவது அல்ல.
ஒலிநயமும் உணர்வுப்பூர்வ வெளிப்பாடும் அதில் இருக்க வேண்டும்.
படிக்கும் போதே சில கவிதைகள் நம்மை அந்தச் சூழலில் ஆழ்த்தி மனதை லயிக்கச் செய்யும்.
கம்பர் தனது இராமாயணக் காவியத்தில் பல இடங்களில் மதுரசமாய் இனிய சொல்லாடல்களைப் பயன்படுத்தி இருப்பது நமது சிந்தைக்கு விருந்து.
திரும்பத் திரும்ப படிக்கும் போது கம்பனின் கவிதைகள் பல நமது நெஞ்சக் குழிக்குள் தமிழின் இனிமையைத் தேனில் நனைத்த பலாச்சுளையின் சுவையாகத் தந்து விட்டுப் போகும்.
இந்த நிகழ்வைப் படியுங்கள் …. கம்பனின் கவிநயம் நெஞ்சமெல்லாம் மயிலிறகால் வருடுகிறது.
தம்பி இலக்குவனால் நிர்மாணிக்கப்பட்ட பர்ணசாலையின் வெளியில் இராமர் படுத்து ஓய்வில் இருக்கிறார். அந்த நேரத்தில் தனது கணவன் வித்யுத்சிகுவனைப் போரில் பறிகொடுத்து கைம்பெண்ணாகக் காட்டில் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் சூர்ப்பனகை அங்கே வருகிறாள். அரைகுறையாய் கண்களை மூடியும் திறந்தும் துயில் கொள்ளும் இராமனைக் காண்கிறாள். அவனது அழகில் மயங்கி தனது அரக்க உருவத்தை அழகிய உருவாக மாற்றிக் கொண்டு இராமனை நோக்கி நெருங்குகிறாள் … அவளது எழில் கொஞ்சும் மேனியழகு … அவளது நடை எப்படி இருந்ததது என்பதை கம்பன் நம் கண் முன்னே தனது கவிதை வரிகளால் அழகுபடக் கூறுகிறான் … பாருங்கள் …
” பல்லவ மனுங்கச் பஞ்சியொளிர் விஞ்சுகுளிர்
செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடிய ளாகி
அஞ்சொலிள மஞ்சையென அன்னமென் மின்னும்
வஞ்சியென் நஞ்சமென வஞ்சமகள் வந்தாள் ”
அவள் ஒரு மயிலைப்போல் அலுங்காது அடியெடுத்து வைத்து மென்மையாய் வருகிறாள்.
இதனுடைய பொருள் படிக்கும் போதே நமக்குத் தெரிகிறது. நளினமாய் மயக்கும் வண்ணம் தமிழ் சொற்களைக் கையாண்ட கம்பனை என்ன சொல்லிப் பாராட்டுவது?
பஞ்சி, விஞ்சு, செஞ்செ, அஞ்சொல், வஞ்சி, நஞ்சு, வஞ்ச என்று மெல்லின வார்த்தைகளைக் கையாண்டு நம்மை இன்பத்தின் உச்சிக்கே அழைத்துச் செல்கிறான்.
பெண்களுக்கே உரித்தான நளினம் இங்கு மெல்லின வார்த்தைகளால் வெளிபட்டாலும் கடைசியில் சூர்ப்பனகையின் இயல்பை ” நஞ்சமென வஞ்ச மகள் வந்தாள் ” என்று முடித்து உள்ளத்து உணர்வை வெளிப்படுத்துகிறான். என்னதான் நடையழகும் உடையழகும் வதன அழகும் இருப்பினும் அவள் ஒரு வஞ்ச மகள் எனும் போது கம்பனின் கவிநயம் இங்கே வெளிப்படுகிறது. மீண்டும் மீண்டும் படியுங்கள் … சுவையை உணருங்கள்.
1 Comment
விஜி · செப்டம்பர் 9, 2019 at 11 h 10 min
வார்த்தைகளே இல்லை. இந்த வரிகளை ரசிக்க இன்னும் ஒரு ஜென்மம் தமிழ் பயில வேண்டும்