கொக்காட்டிக் கொலுசாட்டிக்
கொஞ்சிக் கொச்சனை நீராட்டி …
கொப்பாட்டிக் குலையாட்டிக்
கொத்துக் கொத்தாய் கொழுநீர் வடித்து
கொண்டெனையிழுத்து வந்த கொம்மையே …
நரையேறி நலிவேறி
நடுக்கேறி நட்டோரும் உதறி
நரங்கேறி நளதேறி
நன்னிச் சுருங்கிய நனவேறி
நழுவிப் பின் நீ நயம் தேடுமுன்
சீத்தாட்டிச் சீமையேற்றி
சீர்ப்போடுனை சீமாட்டி
சீரூட்டிச் சிரிப்பூட்டி
சீயாளாக்கியுனை சிறப்பாக்கி
சீமத்துச் சீமந்தினியாய் … சீதேவியாய் வனப்பாக்கி …
பட்ட கடன் பங்கெடுத்து
பலாபலன்களுன் பாதமிறக்கி
பட்டனாகிப் பாவுரைத்து
பட்டினம் போற்றப் பட்டது மறந்து
பப்புவர் பரப்புவர் பம்மலும் போக்கி …
மெத்துப் பெருக்கிடும் மெச்சில் நனைந்து
மெழுகும் மென்மையுமாய் பிணைந்த (வு) னை
மென்னகை மெய்ப்பொருளாய்
மெட்டிட்டுக் கட்டிட்டு மென்பாவோங்கி உரைத்து
மெய்ப்பிக்கக் காத்திருந்த மெய்யனை மெல்ல
விட்டுட்டுச் சென்றதென்ன நியாயம்
விக்கித் திரளுகின்றேன் கேட்கின்றதா என் கானம்
விடுகதைக்கு நான் விடை தேட முன்னம்
விசிறியடிக்கிறது விசாலம்
வி்ண்டலமேறினும் கிடைத்திடுமா விதானம்!
விடை தெரியா விதூரத்தில் நீ …
விபரமறியா விளையாட்டில் நான் …
விம்மியழும் விதம் காண மட்டும்
விரைந்தோர் முறை வருவாயோ …
விடியும் வரை மடிசாயத் தருவாயோ …
என் செக்குச் சீமாட்டியே ..!