நிறத்தைப் போலவே
மனமும் வெள்ளை என்றவளே! – அதில்
கரும்புள்ளியை வைத்துவிட்டு
எங்கே சென்றாய்?
தேனினும் இனிமை
குரல் என்றவளே!
அதைக் கசப்பாக்கிவிட்டு
எங்கே சென்றாய்?
பாலினும் தூய்மை
குணம் என்றவளே! -அதைத்
திரியவைத்துவிட்டு
எங்கே சென்றாய்?
கண்கள் கலங்கிய போதெல்லாம்
என்னைவிட உன்கைகள்
என்கண்களைத் துடைத்தனவே!
இன்றும் கலங்குகிறேன்
உன்கைகளுக்காக ஏங்குகிறேன்!
துவண்டபோது எல்லாம்
தோள்கொடுத்துத் தூக்கியவளே!
இன்றும் துவளுகிறேன்
ஊன்றுகோலாய் நீ எங்கே?
இனியொரு பிறவி வேண்டும்!
இணைந்து தினம் கல்லூரிக்குச்
செல்லும் வரம் வேண்டும்!
கவலைகளின்றிச் சுற்றித்திரிந்திடவே …
வாழ்வதுவும் வேண்டும்!
உன்தோளில் தலைசாய
என்னதவம் செய்வேனோ?