வல்ல துணையென வண்டமிழைக் கொண்டவர்க்கே
இல்லை ஒருபோதும் இன்னலிங்கே!- தொல்லைதரும்
வெள்ளைய ரின்மொழி வேண்டாதார் என்றிருந்தால்
உள்ளத்திற் கஃதே உயர்வு!
தன்னையே தான்போற்றும் தற்பெருமை கொண்டவர்க்கே
என்றுமிந்தப் பூமியிலே இல்லையிடம்! – நன்கறிவீர்
கள்ள மிலாத கனிவான நெஞ்சமுண்டேல்
உள்ளத்திற் கஃதே உயர்வு!
குற்றம் இழைப்போர் குணங்கண்டு யாமாற்றும்
நற்கருமம் நாட்டிற்கே நன்மைதரும்! – கற்றவர்கள்
தெள்ளுதமிழ்ப் பாட்டாலே தேடிநல் வாழ்வளித்தால்
உள்ளத்திற் கஃதே உயர்வு!
எண்ணம் இனித்திட இன்னிசையை யாம்கேட்டால்
விண்ணைத் தொடுமுணர்வு விண்மீன்கள்! – கண்ணுள்ளே
துள்ளுகையில் துன்பங்கள் தூரப்போம் எந்நாளும்
உள்ளத்திற் கஃதே உயர்வு!
ஆல்போல் தழைத்தே அறுகுபோல் வேரூண்ட
நால்வர் அருளிய நற்கருத்தைப் – பாலென்றே
அள்ளிப் பருகி அகத்தூய்மை பெற்றுவிட்டால்
உள்ளத்திற் கஃதே உயர்வு!
தங்கத் தமிழிருக்கத் தாவுவதும் நன்றல்ல
இங்கிலீசு வாழ்வளிக்கும் என்றிங்கே! – எங்களினம்
வெள்ளைய ரின்தயவே வேண்டாமென் றிங்கிருந்தால்
உள்ளத்திற் கஃதே உயர்வு!