சிலைபோல் மேனி சிரித்தால் பூ நீ
சிந்தனை வளைக்குதடி – கடல்
அலைபோல் உந்தன் நினைவே எந்தன்
அடிமனம் துளைக்குதடி
கண்ணே உன்னைக் காணக் காணக்
கனவுகள் வளருதடி – என்
திண்மை மனமும் சேயிழை உன்னால்
தேய்ந்தே தளருதடி
கனியே உந்தன் மதிமுகம் கண்டால்
காலம் மறக்குமடி – எந்தக்
கனிந்த நல்ல துறவியின் மனமும்
துறவைத் துறக்குமடி
கறுப்பே களையாம் யாரோ சொன்ன
கருத்தும் உண்மையடி – நீ
விருப்பத் தோடே பேசி மகிழ
வரணும் அண்மையடி
முதலில் என்னைக் கண்ட போதுன்
முகமே மலர்ந்ததடி – பின்
இதயம் மகிழ நிதமும் சிரிப்பே
இதழில் தவழ்ந்ததடி
எவரே மகிழ்வார் இதுபோல என்றே
இதயம் நிறையுதடி – உன்
கவரும் கிளிமொழி கேட்டால் நெஞ்சக்
கவலை மறையுதடி