என்னை என்றும் இகழ்ந்தாலும்
ஏற்றுக் கொள்வேன் மகிழ்வுடனே
அன்னைத் தமிழின் மரபைத்தான்
அவச்சொல் சொல்லிப் பேசிட்டால்
கன்ன மிரண்டும் வீங்கிடுமே
கனிந்த நட்பும் பிரிந்திடுமே!
மரபின் மாண்பைப் புரியாது
மதியி ழந்தே ஏசாதீர்
சிரத்தில் ஏந்தா விட்டாலும்
சீர்தான் கெட்டுப் பேசாதீர்
மரத்தில் அடித்த ஆணியைப்போல்
மனதின் அடியில் பதிந்திடுமே
சரமாய்க் கோபம் வந்தேதான்
சவுக்காய் வார்த்தை நீண்டிடுமே!
மரபேக் கவியின் தாயல்லவா
மறுத்தால் வருமே நோயல்லவா
மரபை மதித்தால் துதித்திடுவேன்
மாறாய் மறுத்தால் மிதித்திடுவேன்
மரபைத் தொழுதால் செருப்பாவேன்
மனதில் நிறுத்தி போற்றிடுவேன்
மரபும் தமிழும் ஒன்றல்லவா
மாண்பாய் வளரும் காத்திடவே!