தை திங்கள் முதல் நாளாம்
தமிழர்க்கெலாம் திரு நாளாம்
ஏர் முனையில் வாழ்பவர்க்கு
பேர் புகட்டும் பெரு நாளாம் !
சிற்றெரும்பு வட்டமிட
முற்றமதில் மாக் கோலமிட்டு
வற்றாத வாழ்வு பெற
பற்றுக் கொண்ட பாமரரும்
சுற்றங்களும் சூழ்ந்து நின்று
செங்கதிரோன் முகம் பார்த்து
செங்கரும்பு புறம் நட்டு
சேய் தழுவும் மார்பினைப் போல்
அதை தழுவி மஞ்சள் இட்டு
மா இலைத் தோரணங்கள்
மங்கலமாய் வாசல் கட்டி
வண்ணக் கோலம் நடுவினிலே
வகையாக அடுப்பு மூட்டி
வளைக் கரங்கள் கை கூட்டி
புத்தரிசி பானையிட்டு
பொங்கிவர பொங்கலிட்டு
பொங்கலோ பொங்கல் என
பூரிப்பில் கொளை இட்டு
தலை வாழை படையல் போட்டு
உண்டி தரும் உழவனுக்கும்
அண்டி வாழும் ஆவினுக்கும்
நன்றி சொல்லி நாம் மகிழ்ந்து
ஏர் தந்த சீதனத்தை
பார் கண்ட எளியவர்க்கு
கார் கொண்ட உள்ளத்தால்
சீர் கொண்டு பகிர்ந்தளித்து
பொங்கிடும் அவர் புன்னகையில்
புதுப் பொங்கல் சமைத்திடுவோம் !!!