பண்பின் சிறப்பைப் பேசிடுவார்
பக்கத்தில் பரத்தையர் துணை கொண்டு…
அன்பால் உலகை ஆள்வேன் என்பார்
ஆயுதத் துணையுடன் உலா வந்து…
நற்றமிழே என் உயிர் என்பார்
நாவில் தமிழ் உயிர் ஊசலாட…
பெற்ற சுதந்திரம் பேண் என்பார்
மற்றவர் உரிமையை களவாடி…
ஒற்றுமையே உயர் வழி என்பார்
பற்றுக் கொண்டு மத பேதம் பேசி…
கற்றது வழி என் நடை என்பார்
கயமையே தன் வாழ்வில் மூலதனமாய்…
பற்றற்ற ஞானி யான் என்பார்
பட்டுக் கம்பளத்தில் நடந்து கொண்டே…
உற்ற குணம் ஒன்றிருக்க
மற்றவர் பார்வைக்கு பவித்திரமாய்
வெற்று வார்த்தைகள் பேசும் இவர்கள்
ஏற்றம் கொண்டுத் திரிந்தாலும்
துரு நாற்றம் வீசும் கழி பிணங்கள்…!