(எண்சீர் விருத்தம்)
கண்ணாடிப் போலந்த கலங்காத நீர்மேல்
களிப்போடு முகம்பார்க்க காலடியில் நீரை!
தண்ணீரின் அழகில்நீ தடுமாறிப் போவாய்
தன்னிழகை ஒத்தவளை தலைவணங்க வாராய்!
வெண்மேகம் உருவாக உன்பங்கும் உண்டோ
வெள்ளியெனத் துள்ளிவரும் வான்துளியின் தாய்;யார்?
மண்மீது தவழ்ந்தாடும் மலைக்காற்றும் சேரும்
மனங்குளிரத் தென்றலுனைத் தாலாட்டிப் பாடும்!
பச்சைநிறக் கீற்றாகி பால்நிறைந்த தென்னை
பருவத்தே தான்வளர்ந்து பளிச்சிடுவாய் கண்ணில்!
இச்சையை,நீ காட்டாமல் இளயவளாய் என்றும்
இசைப்பாடும் அலையாலே இன்புற்றாய் நின்று!
எச்சமுமிழ் காகங்கள் இளைப்பாறும் உன்னில்
இதமாக்கும் குளிர்வாடை உன்னருகே நிற்க!
உச்சிவெயில் வாட்டாது உன்னழகைப் பார்க்க
உனைத்தேடி வருவோரக்கு உடன்தருவாய் மென்னீர்!
கரையாடும் கடல்நீருன் காலடியில் பாங்காய்,
கலக்காமல் தருகின்றாய் கனிவானத் தேங்காய்!
நுரைப்போலே பால்வெண்மை நுழைக்கின்றாய் நீரில்!
நுழைவாயில் அடைக்கின்றாய் நுண்ணுயிரை வைத்தே!
அறைக்குள்ளே வைக்கின்றாய் அருமருந்தைக் கொண்டு
அமுதாகும் பலருக்கு அரும்பசியைப் போக்கி!
பறைசாற்றும் படியான பயன்பாடு நூறாம்
படைகொண்டுப் போனாலும் பஞ்சுமெத்தை யாவாய்!
வெள்ளைமணல் வருடிவிட கைவிரலும் மோதும்
வெளிவானம் நீலநிறம் வெண்திட்டு மேகம்!
துள்ளுமென்தன் மனதோடு உறவாடும் தென்றல்
தூரிகையாய் கீற்றசைய துயரதுவும் நீங்கும்!
அள்ளியெடுத்து அரவணைக்க அமுதாய்நீர் முன்னே
அழகென்றால் கண்டுமகிழ அமைந்தனரோ உப்பாய்!
கொள்ளைபோகும் மனமிங்கு கொஞ்சிவிளை யாடும்
குதிரையாகத் தாவியோடும் குரங்கினத்தைப் போலே!
1 Comment
பெண்ணியம் செல்வக்குமாரி · செப்டம்பர் 18, 2017 at 17 h 41 min
அனைத்து கவிதைகளும் அருமை