ஆவி யுடற் கரண மனைத்து மொன்றாகித்
தாவித் தமிழோடுத் தவிழ்ந்திருப்பேன் – பூவுலகில்
மாற்றக் காட்டாறு மையற்றாங் கொண்டாலுஞ்
சாற்றும் மரபுக்குண்டோ சா?

வாழையடி வாழை நின்று
வண்ணத் தமிழாடை கொண்டு
வையமுள்ள வரைக்கும் வரும் மரபு – சட்ட
வரம்புகளை மீறிவிட்டா லிழிவு.
பாளைமடித் தேனை வென்று
பல்சுவையிஞ் சாரமுண்டு
பைந்தமிழிற் புதுமை ஒன்று வரவு – திட்டப்
பாதையிலே மாற்றங் கொண்ட துறவு!

மாற்ற மென்றாற் புது வளர்ச்சி
மரபுக்கு ளது மலர்ச்சி
மானிலத்தி னொப்புரவுத் தன்மை – கெட்ட
மாற்றங்களால் மாளுந் தமிழ் உண்மை
தோற்றங் கொண்ட தொற் றமிழிந்
தொல்காப்பியம் முதற் கொண்டு
தோகை விரித்தாடுகின்ற மொழியில் – ஏதும்
துன்பம் வரின் பெருகும் நீர் விழியில்

நன்னூலிற் பவணந்தி
நயந்துரைத்த இலக்கணத்தை
நல்லபடி நோக்கி விடின் புதுமை – மனம்
நாடும் வழி நாடிடுவோர் பதுமை
முன்னோர்கள் அமைத்த விதி
முறைமையிலே படைத்த மதி
முன்னேறிப் போகு மென்ப துறுதி – செம்
மொழிக்கென்றும் காலமில்லை இறுதி!

மாற்றம் என்ற போர்வையிலே
மரபழியும் நிலை வந்தால்
மாய்த்துயிரைப் போக்குவதே மானம் – சில
மாற்றங்கள் நமக்கு அவமானம்
காற்று மின்னல் வேகத்திற்
கணிப் பொறிகள் தேகத்தில்
காலமெல்லாஞ் செம்மொழியைச் சேர்ப்போம் – இந்தக்
காசினியைத் தமிழ்ப்பூவாற் கோர்ப்போம்!

பயனுள்ள மாற்றங்கள்
பாருக்குள் நடக்கிறது
பல்வகைமைப் பனுவ லிங்கே வேண்டும் – அதற்கு
பகலிரவாய் உழைப்போமே யாண்டும்
சயனத்தில் மூழ்கி விடும்
சண்டாளர்ப் பெருக்கெடுத்தாற்
சாரமுள்ள செந்தமிழே வாடும் – இந்தச்
சங்கதிக்கு யென்று வருங் கேடும்!

வள்ளுவனிஞ் சொல்லனைய
வையகத்தோ டொட்டொழுகி
வாழ்வதிலே யென்று முண்டு ஏற்றம் – இணை
வலைத்தளத்தில் வீசும் தமிழ்க் காற்றும்
தெள்ள முதச் சாகரத்தின்
தெளிவான பொக்கிஷத்தைத்
தேசம் பலத் தாண்டச் செய்வோம் வாரீர் – சுனைத்
தேனருவி பொங்குவதைப் பாரீர்!

அறிவியலின் பெரு வளர்ச்சி
அகிலத்தை நிறைக்கிறது
அதற்கேற்ற அழகாடை கொடுப்போம் – தமிழ்
அணங்கைத் தான் ஆடையென உடுப்போம்
நெறிமுறைமைப் பண்பாடு
நெக்குவிடா அன்போடு
நெருக்குற்ற செம் மொழியைக் காப்போம் – இள
நெஞ்சங்களின் இதயத்திற் சேர்ப்போம்.


1 Comment

R.T.Suresh · ஜனவரி 10, 2023 at 1 h 11 min

அருமை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்