நெல்லும் விளைஞ்சிருக்கு
நெஞ்சும் நிறைஞ்சிருக்கு!
அல்லி மலருவொன்னு
அங்கே பூத்திருக்கு!
துள்ளும் அழகிருக்கு
தூண்டில் கண்ணிருக்கு
அள்ளி அணைப்பதற்கு
ஆசை மிகுந்திருக்கு!
வரப்பு வயலோரம்
வசந்தம் அமர்ந்திருக்கு
கருப்புக் குயிலுவொன்னு
காத்துத் தவமிருக்கு!
திரும்பும் திசையெங்கும்
தீயா நினைப்பிருக்கு
குறும்புப் பார்வையிலே
கோலம் குடியிருக்கு!
கருதும் அறுப்பதற்கு
காலம் கனிஞ்சிருச்சு
விருந்தும் வைக்கத்தான்
வேளை நெருங்கிருச்சு!
கரும்பே நாவுன்னைக்
கடிச்சுத் தின்னட்டுமா!
எறும்பா மாறியுந்தான்
எடுத்துச் சுவைக்கட்டுமா!
1 Comment
இரவீந்திரன் · டிசம்பர் 13, 2016 at 6 h 39 min
அருமைப் படையலையும் அழகாய்ப் படைத்துள்ளீர்
விருந்து வைத்தெனையும் விரும்பிப் படிக்கவைத்தீர்
கரும்பாய் கற்கண்டாய் கடித்தும் உண்டேனே
கருத்தாய் படித்தநானும் களித்தும் உருகினேனே!
வாழ்க வளத்துடன்.