கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிகள் பாடுமாம்
என் வீட்டு தறியோ என்னை கவிஞனாக்கியது!
என்னிதய ஓசைகளை காட்டிலும்
தறியின் ஓசைகளையே
நான் அதிகமாக்க் கேட்டிருக்கிறேன்!
தறிகள் ஆடும் போதுதான் எனக்குள்
காதலும் நர்த்தனம் ஆடுகின்றன …
இலைகளை கோர்க்கும் போதுதான் எனக்குள்
வார்த்தைகள் கோர்வையைத் தேடுகின்றன …
நாடா அங்கும் இங்கும் ஓடும் போதுதான்
எனக்குள் வரிகள் தாண்டவம் ஆடுகின்றன …
சட சட சட வென என் தறிகள்ஓடும் போதுதான்
எனக்குள் கவிகளும் வடிவம் பெறுகின்றன…
இதய ஓசை நின்று விட்டால்
எனக்குள் உயிரின் ஓசை இல்லை!
தறியின் ஓசை நின்று விட்டால்
எனக்குள் கவிதை ஆசையும் இல்லை!
பெரும்பாலானவர்களை கவிஞனாக்கியது
காதல் என்றால் …
என்னை கவிஞனாக்கியது
எந்தன் தறிகள் தான்
செய்யும் தொழிலே தெய்வம்
அந்த தெய்வம் என்னையும்
கவிஞனாக்கியது!
ஒவ்வொரு இரவிலும், தறிகளின் அடியிலே
என் தாயின் மடிகளாய் நினைத்து
நான் உறங்கி போகிறேன்!
4 Comments
குமார் முருகேசன் · அக்டோபர் 11, 2016 at 11 h 41 min
எந்தன் கவிதை புதிய வடிவம் பெற்றிருக்கிறது…
மகிழ்ச்சி
??? · அக்டோபர் 11, 2016 at 11 h 56 min
Superb ma
ஆலமரம் · அக்டோபர் 11, 2016 at 11 h 57 min
செய்யும் தொழிலே கவிதையானது கண்டு அதிசயிக்கிறேன்.
குமார் முருகேசன் · அக்டோபர் 16, 2016 at 8 h 38 min
நன்றிகள் தோழமைகளே…