தொடர் 07

மராட்டிய வீரன் சிவாஜியைப் பற்றி படிக்கும் போது இந்த கதையையும் நீங்கள் படித்திருக்கலாம்.

ஒருநாள் மாறுவேடம் பூண்டு நகர்வலம் வந்த சிவாஜி, இரவு வேளையில் மழையில் சிக்கிக் கொள்ள அந்த கிராமத்தில் இருந்த ஒரு கிழவியின் இல்லத்தில் ஒதுங்க நேரிடுகிறது. கிழவி அன்போடு அவனை வரவேற்றதோடு அன்றைய இரவை அங்கு கழித்துச் செல்ல அனுமதி தருகிறாள். கூடவே தான் தயாரித்த சூடான கோதுமைக் களியினை உண்ணவும் தருகிறாள். அவள் அறிந்திருக்க வில்லை வந்திருப்பவன் மன்னன் சிவாஜியென… அவனும் அந்த மழைவேளையில் அலைந்து வந்த காரணத்தால் ஏற்பட்ட பசியிலும், அந்த கோதுமைக் களியின் மணத்தாலும் கவரப்பட்டு வெகு ஆவலாக சூடான அந்த களியின் மையப் பகுதியில் கைவைக்க, சூடு தாங்காமல் கையை விருட்டென எடுத்தான்.

சிரித்த கிழவி, என்னப்பா… களியை இதற்கு முன் உண்டதில்லையா. சூடான களியின் மையத்திலா கைவைப்பார்கள்..சுற்றிலும் கொஞ்ச கொஞ்சமாக உண்ட பிறகு, மையப் பகுதியை உண்ணலாமே.  மையப்பகுதியும் ஆறிப் போயிருக்கும், உண்ணுவதும் எளிது. நேரடியாய் மையத்தில் கைவைப்பது உனக்கு சுடத்தானே செய்யும் என்றாள்.

சிவாஜிக்கு மின்னலென ஒரு எண்ணம் வந்து போனது. அவன் தனது படையெடுப்பை நேரடியாக எதிரியின் தலைநகர் மீது நடத்த திட்டமிட்டு இருந்தான். ஆனால் இச்சம்பவமே ஒரு நாட்டினை கவர முதலில் சுற்றிலும் உள்ள கிராமங்களை கவர்ந்து விட்டால், அங்கிருந்து கோட்டையில் அமரந்து ஆட்சி செய்பவருக்கு எந்த உணவும், உதவியும் செல்லாது..பின் அவர்களை வீழ்த்துவது எளிதென ஒரு படிப்பினையைக் கற்றுத்தந்ததாக இந்தக் கதையை சொல்வார்கள்.

அதுசரி..ஹைக்கூவிற்கும்…இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் என நீங்கள் கேட்பது புரிகிறது..ஒரு சிலருக்கு இந்த கதை ஏன் எனப் புரிந்திருக்கும்..

ஆம்..

ஹைக்கூ எழுத விதிகளை தெரிந்து கொண்டோம்.. ஒரு சில ஹைக்கூவையும் படித்து தெரிந்து கொண்டு விட்டோம்..பின் என்ன…எழுதி குவித்து விட வேண்டியது தானே என்ற எண்ணம்தோன்றும். ஆனால்.. நல்ல ஹைக்கூ பிறக்க தேவைப்படும் விசயங்களையும், தவிர்க்க வேண்டிய விசயங்களையும் நாம் அறிந்து கொள்வது நல்லது. இல்லையெனில்..

களியின் மையப்பகுதியைத் தொட்டு சூடுபட்ட மராட்டிய வீரனின் கதைதான் நமக்கும்.

ஹைக்கூவின் பிதாமகன் பாஷோ… ஹைக்கூவைப் பற்றி கவிஞர்களிடம் குறிப்பிடும் போது… உனக்கும், உன் கருப்பொருளுக்கும் ஒரு மயிரிழை கூட இடைவெளி இருக்கக் கூடாது என்கிறார். கூடவே கவிஞன் அவனது உள் மனதோடு நேரடியாக பேச வேண்டும் என்பார். எண்ணங்களை கலைய விடாமல் நேரடியாகச் சொல் என்கிறார். அது மட்டுமின்றி ஒரே கவிதையென்றாலும் கூட சரி… உன் பெயரை என்றும் நிலைநிறுத்தும் படியாக ஹைக்கூவை படைத்திடு என்கிறார்..

இவர் என்னச் சொல்கிறார்… ஹைக்கூ எழுத… நீயே ஹைக்கூவாக மாற வேண்டும் என்கிறார். சதா கவிதை உணர்விலேயே வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும் என்கிறார்.  இருத்தலின் வெளிப்பாடே ஹைக்கூ..சிந்தனையை உள்வாங்கி நிகழ்வில் பங்கேற்கச் செய்வதே ஹைக்கூ வாகும் என்கிறார்.

இந்த கட்டுரையை எழுதத் துவங்கிய சமயம்..நண்பர் ஒருவர் எனது முகநூல் உள்பெட்டியில், ஹைக்கூவை சொல்லித் தந்து புரிய வைக்க இயலுமா… என கேள்வி ஒன்றை கேட்டிருந்தார்.

இது, எழுதத் துவங்குபவர்களுக்கு வழங்கப்படும் ஆலோசனைகள்.

அவர்களது கவிதைகள் சிறப்படைய நான் காட்டும் சில வழிமுறைகள் மாத்திரமே..

ஒரு ஜென் குரு தனது மாணவனுடன்  வயற்பரப்பில் சென்று கொண்டிருந்தார். வேகமாக அவர் நடந்து செல்ல, விளையாடிய படியே தொடர்ந்த சீடனின் கவனத்தைக் கவர்ந்தது ஒரு தட்டான் பூச்சி. உடனே அவன்…

செந்தட்டான் பூச்சி
அவற்றின் சிறகினை வெட்டினால்
மிளகு குமிழ்கள்..!

Red Dragonflies
Take off their wings
and they are Pepperpods.

என பாடினான்.

முன்னே சென்ற ஆசானோ… தவறு, அதை இப்படி திருத்து..

செம்மிளகு குமிழ்கள்
இறகுகளைச் சேர்
இப்போது அவை தட்டான்பூச்சி..!

Red pepperpods
Add wings to them
and they are Dragonflies.

ஆம்..ஹைக்கூவில் சின்ன உயிர்களையும் சிறப்பித்து பாட வேண்டுமேயன்றி..அதை வதை செய்து பாடுதல் கூடாது என்றார் ஆசான்.

அந்த ஆசானே ஹைக்கூவின் பிதாமகன் எனப் போற்றப்படும் பாஷோ..

மாணவனோ பின்னாளில் கிககு ( Kikaku ) என அழைக்கப்பட்ட அவரது சீடன்..

இக் கட்டுரையிலும், நீங்கள் கற்றுக் கொள்ள இருப்பது… நீங்கள் எழுதும் ஹைக்கூவைச் சிறப்படைய வைப்பதற்கான வழிமுறைகளை மாத்திரமே… அதனை இனி அடுத்து ஒவ்வொரு பகுதியிலும் காண்போம்.

இன்னும் வரும்..

  முன் தொடர்


1 Comment

Viji Senthil · செப்டம்பர் 26, 2024 at 10 h 08 min

ஓ! சிறப்பு!!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Related Posts

நேர்காணல்

உலகின் சரிபாதி பெண்

வணக்கம் தங்களைப் பற்றித் சுருக்கமாகக்கூற முடியுமா?

ஆம் நான் அ.ல.முகைமினா. எழுத்தாளர், ஆசிரியர், கவிஞர் சமாதான நீதவான் மற்றும் அரசியல் வாதியாக சமூகத்துக்காக சமூக செயற்பாட்டாளராக, ஊடக வியலாளராக என்னை அர்ப்பணம் செய்து வருகிறேன்.

 » Read more about: உலகின் சரிபாதி பெண்  »

நேர்காணல்

நக்கீரர் வழியில் பட்டுக்கோட்டை அ.த.பன்னீர்செல்வம்

பட்டுக்கோட்டை நகரில் புகழ் பூத்த தமிழ்க்குடும்பம் மீ. தங்கவேலனார் அவர்கள் குடும்பம் அந்தக் குடும்பத்தில் மூத்த தலைமகன் திரு அ.த. பன்னீர்செல்வம் அவர்கள் பட்டுக்கோட்டை நகரில் நக்கீரர் என்று பெயர் பெற்றவர் ஆய்வுச் சுடர் என்ற  பெருமைக்குரியவர்..

 » Read more about: நக்கீரர் வழியில் பட்டுக்கோட்டை அ.த.பன்னீர்செல்வம்  »

நேர்காணல்

இலக்கிய வித்தகர் மஷூறா சுஹூறுத்தீன்

சம்மாந்துறையைப் பிறப்பிடமாகவும் தற்போது மருதமுனையை வசிப்பிடமாகவும் கொண்டவர் சித்தி மஷூறா சுஹூறுத்தீன். 1979 ல் மஷூறா ஏ மஜீத் என்ற பெயரில் வானொலியில் எழுதவாரம்பித்து இலங்கையின் தேசிய பத்திரிகைகள் அனைத்திலும் மற்றும் சஞ்சிகைகளிலும் எழுதியவர்.

 » Read more about: இலக்கிய வித்தகர் மஷூறா சுஹூறுத்தீன்  »