தாய்நாட்டை பிரிந்த
அகதிபோல் ஆனேன்
உன்னைப் பிரிந்து
வாடும் நான்
– தட்சணா மூர்த்தி
கொடுத்துச் சிவந்த
கரங்களைக் காண்கிறேன்!
குங்கும வியாபாரி
என்றால் அப்படித்தான்!
– க.பன்னீர் செல்வம்
ஆயிரக் கணக்கானோரை
எழுப்ப வேண்டும்
மரணத்திற்கெதிரான மருந்து
யார் கையில் இருக்கும்?
– முனைவர் ம.ரமேஷ்
தொடரி கிளம்பி நேரமாயிற்று.
சன்னலில் எட்டிப் பார்க்கிறேன்.
இன்னும் துரத்தியவாறே…
உன் நினைவுகள்.
– புகழேந்தி
எனக்குள்
நீ.
ஒளிந்து விளையாடமுடியாமல்
நான்.
– காவனூர். சீனிவாசன்.
மரம் குறித்து
கவிதை ஒன்று
எழுதுகிறேன் குறிப்பேட்டில்
படபடக்கிறது தாள்.
– சக்திஅருளானந்தம்
நமக்குத் தெரியவில்லை
அதற்குத் தெரிந்திருக்கிறது
எங்கோ துளிர்விடுகிறது
பச்சை மூங்கில்.
– வெற்றிப்பேரொளி
காயங்களும் கண்ணீரும்
சொந்தமாகிப் போன வாழ்வில்
விரக்தியிடமிருந்து
விலகித்தான் நிற்கிறேன்…
– ஆத்தூர் சாகுல்
பேருந்துப் பயணத்தில்
ஊசி விற்ற சிறுவன்
தைத்துக்கொண்டே வருகின்றான்
என் பயணம் முழுதும்.
– ஆ.நடராஜன்
வயலை உழுகின்ற உழவன்
அரை நிர்வாணமாய்
வரப்பில் நின்ற பொம்மை
அழகான ஆடையுடன்..!
– அனுராஜ்
வாசனை இல்லா
வண்ண வண்ணப் பூக்கள்
பறிக்க முடியாதபடி
அவள் சேலையெங்கும்.
– தமிழ்.
நடந்த தூரத்தை
அளவிட முடியவில்லை
சுற்றும் பூமியை
நிறுத்திட இயலாது.
– வா.சண்முகம்
உலக நாடுகளைச்
சுற்றிப் பார்க்கும் சிறுவர்கள்.
கீழே விழுந்து உடைகிறது
பொம்மை விமானம் .
-ஆ.நடராஜன்
நிமிர முடியாதவனுக்குத்
தாள்களே தலைகள் !
நிமிர்ந்தே நடப்பவனுக்குத்
தலைகளே தாள்கள் !
– கவிக்கோ துரைவசந்தராசன்
உயிர் இல்லையென்றாலும்
உயிர்பயம் காட்டுகிறது
அத்துமீறும் பறவைகளுக்கு
சோளக்காட்டு பொம்மை..
– தென்பரை இராக பாஸ்கர்
வண்ணங்களில் சிறந்தது
கறுப்புதான் என்கிறேன்…
காரணம் கேட்கிறீர்கள்
கண் இல்லை எனக்கு.
– செல்வா ஆறுமுகம்
நீ எப்பாத்திரத்தில்
ஊற்றுகிறாயோ..
அப்பாத்திரத்தில்
நிறையும் நீராவேன்..
– சாரதா க. சந்தோஷ்
பாடு பொருள் என்னிடம்
ஏதும் இல்லையென
நினைத்துக் கொள்ளாதே …
உனது கொலுசொலிகள் உள்ளனவே !
– கா.ந.கல்யாணசுந்தரம்
உச்சாணிக்கொம்பில்
என்னை ஏற்றி விட்டு
உற்சாகத்தில் பலர்
தன்னந்தனிமையில் நான்..
– லஷ்மி கார்த்திகேயன்
ஒரு தெரு கூட
இத்தனை கிளர்ச்சி தருமா
எதிர்பார்க்கவில்லை
நீ வசிப்பதால்.
– பான்ஸ்லே
நீ ஓர் அலகு
நான் ஓர் அலகு
இருவரும் இணையின்
அதுவே பேரழகு !
– நளினி தேவி
வாழ்க்கையை ஒரு
கேள்விக்குறியோடுஅணுகுகிறேன்
அதுவும் கேள்விக்குறியோடு
என்னை தினம் பார்க்கிறது
– சரஸ்வதி ராசேந்திரன்
நிதர்சனம் இதுவென்ற
புரிதலின்
உணர்தலால்
இயல்பு வசப்படுகிறது!
– அன்புச்செல்வி சுப்புராஜு
பனிக்குடம் உடைந்து ஓடுகிறது
தடைகளை மீறி
அந்த ஆறடி பள்ளத்தை நோக்கி
மனித வாழ்க்கை.
– த.அதியமான்
உனக்குள் புதிதாக
வெட்கம் முளைத்து
துவங்கப் பட்டது
என்னை வீழ்த்தும் யுத்தமொன்று.
– தமிழ் அரசன்
எப்பொழுதும் மிஞ்சம்
வைக்கிறார் அப்பா
குழந்தைகள் உறங்கியதும்
பசியாறினாள் அம்மா.
– கேசவன் புருஷோத்தமன்
கையசைத்து அவள்
பேசத் தொடங்கினாள்
விழி அசைக்காமல்
சிலையாகி போனேன்
– ஷர்ஜிலா யாகூப்
காண்போரிடமெல்லாம்
கவனமாக கைகொடுக்கிறான்
அந்த ஒற்றைக்கல் மோதிரம்
காதலியின் அடையாளம்…
– ஐ.தர்மசிங்
தூக்கத்திற்கு நான்
பாய் விரிக்கிறேன்
ஏக்கம் எங்கிருந்தோ வந்து
சுருட்டிப் போடுகிறது
– கண்ணன் புலமி
எதையோ இழந்ததாக எண்ணி
வருந்திக் கொண்டிருந்தேன்.
இறுதியில்தான் தெரிந்தது நான்
இழந்தது என்னைத்தான் என்று.
– மா. ஷங்கர்
ரோஜாவை நினைப்பவர்கள்
முள்ளுக்கும் சேர்த்தே தான்
நீரிரைக்க வேண்டும் மனமே
மனித வாழ்வும் அப்படியே.
– ஜென்சி செல்வராஜ்
மறப்பதற்கு மனதை
திசை திருப்பிப் பார்க்கிறேன்
வார்த்தைகளின் வடிவமாக
அங்கும் வந்து வதைக்கிறாய்
– மருதா சமத்
ஒவ்வொரு சொல்லாக
உதிர்த்துக் கொண்டிருக்கிறாய்
நான் கவிதைகளாகக்
கோத்துக் கொண்டிருக்கிறேன்
– மதுரா
நாட்டின் குடிநீர் பஞ்சம்
அமைச்சரவையில் விவாதம்
அயல்நாட்டு பானங்களை
ருசித்தபடி…
– வெ. கலிவரதன்
ஆழ உழுது விதைத்தேன்
உன் நினைவு களை
மறுநாள்,,,,, நீ தான்
எங்கோ முளைத்து விட்டாயே
– பாவலர் வீரவாணன்
மிதிபட்ட புல் தலைநிமிர்கிறது
மீண்டும் வளர,
மனிதனுக்குப் பாடமிது-
கற்றுக்கொள்வானா…!
– செண்பக ஜெகதீசன்
1 Comment
தென்பரை இராக.பாஸ்கர் · செப்டம்பர் 10, 2019 at 4 h 41 min
எனது கவிதையையும் பதிவிட்டமைக்கு நன்றிகள் பல…