விசித்திர அகவல்

ஒரு குறள் வெண்பாவிலுள்ள ஒவ்வோர் எழுத்தையும் ஒவ்வோரடியின் ஈற்றில் அமையுமாறு பாடுவது விசித்திர அகவல் ஆகும்.


குறள் வெண்பா

தமிழமின்

குமுத மலராகக் கோலவிதழ் பின்னும்
தமிழமின் வாழ்க தழைத்து!

அன்னைத் தமிழின் அமுதைப் பருகு
மன்பன்! ஆற்றல் அரிமா! கி.மு
முன்னே மொழியைத் முனைந்து காத்
தன்னே ரில்லாத் தமிழன் நா
மோதும் மறவன்! முத்தமிழ் வல்
தாதும் மணக்கும் தகையன்! தீரா
ஆசை கவிமேல்! ஆக்கம் வாழ்!
மீசைக் கவிமேல் மேவும் உணர்வைக்
காட்டும் நெஞ்சன்! கண்ணியன் என்கோ!
சூட்டும் மின்னிதழ்த் தூயன்! கா
மூட்டும் சீரை உடையன்! அருவி
போலத் தண்மைப் பொழிலன் தந்
கோல இதழ்கள் கூட்டும் நற்புகழ்!
பாடும் புலவர் நாடும் நட்பி
லாடும் மனத்தன்! அருங்கணி வரையன்!
படங்கள் யாவும் பட்டாய் மின்னு
முடைமை கற்றவன்! ஊக்கம் பின்னும்
தன்மை பெற்றவன்! மாட்சி தழைத்
வன்மை உற்றவன்! வாழும் பூமி
சுற்றும் செயலாய்த் தொண்டே சூ
நற்றமிழ் காப்பவன்! நன்றே தமிழமி
னுற்ற பெருமையை ஓதி மகிழ்ந்தேன்!
உலகை உவக்கும் ஒப்பில் தேவா!
நலமே நண்பன் நாளும் இங்காழ்
வண்ணம் செய்க! வளமே பொழி!
எண்ணம் என்றும் இன்பங் குழைத்
தாகம் தணித்த தகையுடை இன்மழை
யாக வேண்டும்! அருளைக் கொடுத்துத்
தமிழமிழ் வாழ்வைத் தாங்கியே உயர்த்து!
உமதுயிர்த் தமிழை ஓங்கியே சாற்று!
எல்லாம் அறிந்த அல்லா அழகைச்
சொல்லி, அகவல் அடிகளில் தோன்றும்
ஈற்றாம் எழுத்தைப் போற்றிப் படித்தால்
சாற்றிய நற்குறள் ஊற்றெனத் துள்ளும்!
விசித்திர அகவல் வேண்டி விளைத்தேன்!
பசியுறு புலமைப் பான்மை தெரிக்கவே!

இக்குறள் வெண்பாவிலுள்ள ஒவ்வோர் எழுத்தையும் மேற்க்கண்ட விசித்திர அகவலின் ஓவ்வோர் அடியின் ஈறறில் அமைந்துள்ளதைக் காணலாம்.

பாட்டரசர் கி. பாரதிதாசன்
26.06.2019